சென்னையில் உள்ள லயோலா கல்லூரியின் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் மாணவர்களின் கேள்விகளுக்கு தொடர்ந்து பதில் அளித்துள்ளார். அந்த வகையில், மாணவி ஒருவர், “மன அழுத்தம் காரணமாக தற்கொலைகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் மிக சிறிய வயதில் இருப்பவர்கள் இந்த மாதிரியான முடிவுகள் எடுத்து பலியாகி விடுகிறார்கள் தற்கொலைகளை தடுக்க உங்கள் அறிவுரை என்ன?” எனக் கேட்டபோது,

“தோல்வி படங்கள் எடுக்காமல் இருப்பது எப்படி என என்னிடம் கேட்ட மாதிரி இருக்கிறது. நான் அதுவும் பண்ணியிருக்கிறேன் அதற்கும் இந்த கேள்விக்கும் என்ன சம்பந்தம் என நீங்கள் கேட்கலாம் நான் 20 - 21 வயதாக இருக்கும் போது அதைப்பற்றி யோசித்து இருக்கிறேன். இதைப்பற்றி வேறு ஒரு இடத்தில் நான் சொல்லி இருக்கிறேன். நமக்கு நம்மைப் பற்றிய ஒரு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் எப்போதுமே. அவரை விட நான் உயரம் என நினைத்துக் கொண்டிருப்போம். அருகில் சென்று பார்த்தல் அவனது தோள் நம்மை விட உயரமாக இருக்கும் அது அருகில் போனால் தான் தெரியும். தள்ளி இருந்து கொண்டு நாம் ஒரு மமதையில் இருக்கக் கூடாது. அந்த மாதிரி மமதைகள் இருந்த வயது எனக்கு அப்போது நான் எவ்வளவு பெரிய கெட்டிக்காரன் இந்த சினிமா உலகமும் கலை உலகமும் என்னை மதிக்க மாட்டேங்குது நான் செத்தால் தான் இப்படி ஒரு கலைஞன் இருந்தான் என தெரியும் என்றெல்லாம் யோசித்து இருக்கிறேன். நான் மிகவும் சீரியஸாக அது குறித்து டிஸ்கஸ் பண்ணி இருக்கிறேன். அப்போது அனந்து என எனக்கு ஒரு நல்ல குரு இருந்தார். அவர் என்னிடம், “போடா மடையா நீ ஜீனியஸ் என்றால் நான் யார் என்று கேட்டார் நான் எத்தனை படத்தில் நடித்திருக்கிறேன் ஆனால் நான் வேலை செய்து கொண்டிருக்கிறேன் அல்லவா? அதற்கான நேரம் வரும் அதுவரையில் பொறுமை இல்லை என்றால் அப்படியே போய் விட வேண்டியது தான்” என்றார் .

அறிவுரை என்று சொல்ல தெரியவில்லை. ஏனென்றால் அந்த தவறை நானே செய்ய ஆசைப்பட்டு இருப்பதால் அதனால் இது பெரிய தவறு என்று அறிவுரை சொல்ல அருகதை இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை . ஆனால் ஒன்றை மட்டும் சொல்கிறேன் First Deadly Sin என்று கொலையை பற்றி சொல்வார்கள் இது அதிலிருந்து எந்த விதத்திலும் குறைந்தது அல்ல இது ஒரு க்ரைம். இதைப் பற்றி சோ மிகவும் அருமையாக சொல்லுவார் ஒரு சிறிய குழந்தை தொப்புள் கொடி அறுந்த ஒரு சின்ன குழந்தை அதை கொன்று விடுவாயா என்று கேட்டபோது, “அது எப்படி சார் அது இன்னொருவரின் குழந்தை” என்றேன். அப்படி பார்க்கும் போது உன்னுடைய அப்பாவின் குழந்தையை கொல்ல உனக்கு எப்படி அதிகாரம் உள்ளது என்று கேட்டார். அந்த மாதிரி இது ஒரு க்ரைம் இதை செய்யாதீர்கள் இருள் எப்போதும் உங்கள் உடனே இருக்காது வெயில் வந்தே ஆகும். அதுவரையில் கொஞ்சம் பொறுமையாக இருங்கள் அந்த இரவு நேரத்தில் இருள் பயமாக இருக்கிறது என்று நினைத்தீர்கள் என்றால் அதை பிரகாசமாக கனவு காணுங்கள். அந்த கனவு கலாம் ஐயா சொன்னது போல உறங்கும் போது வரும் கனவுகள் அல்ல உறங்க விடாத கனவுகள் வாழ்நாள் முழுவதும் நான் என்னென்ன ஆகப் போகிறேன் என்ற கனவுகளை காணுங்கள். அதைப் பற்றி நினைத்துக் கொண்டே இருந்தால் அது ஒரு வேலை நடந்தாலும் நடக்கலாம். நடக்கவில்லை என்றால் அடுத்து பிளான் பி அதைப்பற்றி தான் யோசிக்க வேண்டும். இவ்வளவுதான் அட்வைஸ் ஒரு படத்தில் சார்லி சாப்ளின் தற்கொலைக்கு முயற்சி செய்யும் ஒரு பெண்ணை தடுத்திருப்பார். அந்தப் பெண் நான் சாக வேண்டும் என சொல்லுவார் அதற்கு கட்டாயமாக நீ சாக தான் போகிறாய் ஏன் இவ்வளவு அவசரம் என்று பதில் சொல்வார். மரணத்தை வாழ்க்கையில் ஒரு பகுதியாக ஏற்றுக் கொண்டவன். நான் வாழ்க்கை வேறு மரணம் வேறு இல்லை மரணம் இல்லாத ஒரு வாழ்க்கை முடிக்காத ஒரு கவிதை மாதிரி தான். எனவே மரணம் வரும் அதை நீங்கள் முந்திக்கொண்டு பெற வேண்டிய அவசியம் இல்லை. அதையும் தாண்டி தப்பு செய்தால் என்ன செய்வது அனந்து யாராவது ஒருவர் அவர்களுக்கு இருந்தால் போதும். இதைக் கேட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த உரை ஒரு சப்போர்ட்டாக இருக்கும்” என பேசி இருக்கிறார்.