நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் அடுத்த பிரம்மாண்ட படைப்பாக உருவாகும் ஜீனி திரைப்படத்தில் கதாநாயகியாக இணைந்தது குறித்து நடிகை கல்யாணி பிரியதர்ஷன் முதல்முறையாக தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார். தென்னிந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக விளங்கும் இயக்குனர் பிரியதர்ஷன் அவர்களின் மகளான கல்யாணி பிரியதர்ஷன் கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த ஹலோ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ஹீரோ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் களமிறங்கிய நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் கதாநாயகனாக நடித்து வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான மாநாடு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

அடுத்தடுத்து மோகன்லாலின் மரக்கார்- அரபிக் கடலிண்டே சிம்ஹம், வினீத் ஸ்ரீனிவாசனின் ஹிரிதயம், ப்ரித்விராஜ் & மோகன்லாலின் ப்ரோ டாடி, டொவினோ தாமஸ் தல்லுமாலா என கடைசியாக மலையாளத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடித்த அனைத்து திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. இந்த வரிசையில் அடுத்ததாக தளபதி விஜயின் மேலாளரும் லியோ திரைப்படத்தின் இணை தயாரிப்பாளருமான ஜெகதீசன் பழனிசாமி தயாரிப்பில் மலையாளத்தில் உருவாகி இருக்கும் சேஷம் மைக்கில் ஃபாத்திமா திரைப்படத்தில் கதையின் நாயகியாக நடித்துள்ள நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தனது அடுத்த புதிய தமிழ் படமாக நடிக்கும் படம் தான் ஜீனி. வெந்து தணிந்தது காடு படத்தின் தயாரிப்பாளர் ஐசரி.கே.கணேஷ் அவர்களின் தயாரிப்பில் பிரம்மாண்ட படைப்பாக 100 கோடி ரூபாய் செலவில் தனது 32 வது உருவாகும் இந்த ஜீனி படத்தில் ஜெயம் ரவி கதையின் நாயகனாக நடிக்கிறார். அறிமுக இயக்குனர் அர்ஜுனன்Jr இயக்கத்தில் உருவாக இருக்கும் ஜீனி திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

ஜெயம் ரவியுடன் இணைந்து கல்யாணி பிரியதர்ஷன் கஸ்டடி பட நடிகை க்ரித்தி ஷெட்டி மற்றும் வமிக்கா கேபி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க நடிகை தேவயானி முக்கிய இடத்தில் நடிக்கிறார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 25 ஆவது படமாக உருவாகும் இந்த ஜீனி திரைப்படத்திற்கு மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவில் உமேஷ் J குமார் கலை இயக்கத்தில் பிரதீப் E ராகவ் படத்தொகுப்பு செய்ய யானிக் பென் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றுகிறார். நேற்று ஜூன் 5ஆம் தேதி ஜீனி திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திரைப்படத்தில் இணைந்தது குறித்து நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தனது சமூக வலைதள பக்கங்களில், “எனது அடுத்த தமிழ் படத்திற்காக மிகுந்த உற்சாகத்தோடு இருக்கிறேன். இதற்காக நீங்கள் காத்திருந்தீர்கள் என்று எனக்கு தெரியும் ஆனால் இந்தக் காத்திருப்புக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது. எங்களுக்கு உங்கள் அனைவரது ஆசீர்வாதங்களும் கிடைத்திருப்பதாக நம்புகிறேன். ஜீனி திரைப்படம் எனது ஆசைகளை நிஜமாக்கும் ஒரு படம். எல்லாமே ஒரே சமயத்தில்… அட்டகாசமான ஒரு ஸ்கிரிப்ட், நடிப்பதற்கான ஸ்கோப் இருக்கக்கூடிய ஒரு கதாபாத்திரம், பெரிய நடிகர்கள் பட்டாளம், என்னைப் போலவே மிகுந்த ஆர்வம் மிக்க ஒரு இயக்குனர், அனைத்தையும் செய்யக்கூடிய ஒரு தயாரிப்பாளர் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் சார்…” எனக் குறிப்பிட்டு ஜீனி படப்பூஜைக்கு வந்த தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார். அந்த புகைப்படங்கள் & பதிவு இதோ…