ஜெயிலர் திரைப்படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அவர்கள் நேரில் சந்தித்துள்ளார். தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக திகழும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் முதல் முதலில் தயாரித்த திரைப்படமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்த எந்திரன் திரைப்படம் தான். தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் பேட்ட & அண்ணாத்த ஆகிய திரைப்படங்களில் இணைந்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் நான்காவது முறையாக இணைந்த திரைப்படம் தான் ஜெயிலர். என்றென்றும் மக்கள் மனம் கவர்ந்த சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்த் அவர்கள் முதல் முறை இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடித்திருக்கும் ஜெயிலர் திரைப்படத்தில், சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன், மிர்னா மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர். இதுபோக மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ஜெயிலர் திரைப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், நிர்மல் படத்தொகுப்பு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார். பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ஜெயிலர் படம் ரிலீஸானது. ரிலீசான நான்கு நாட்களில் வெளிநாடுகளில் மட்டுமே 105 கோடி வரை ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் வசூலித்தது. உலக அளவில் முதல் வார முடிவில் ஜெயிலர் திரைப்படம் 375.40 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் வாரத்தில் அதிகபட்சமாக வசூலித்த படம் ஜெயிலர் தான். அதேபோல் இரண்டாவது வார முடிவில் ஜெயிலர் திரைப்படம் கிட்டத்தட்ட 525 கோடிக்கு மேல் வசூலித்து மாபெரும் சாதனை படைத்தது. அதிலும் குறிப்பாக வளைகுடா நாடுகளில் இதுவரை எந்த தென்னிந்திய திரைப்படமும் படைத்தராத அதிகபட்ச வசூல் சாதனை படைத்து ஜெயிலர் திரைப்படம் புதிய அதிரடி சாதனையும் தற்போது படைத்திருப்பதாக வெளிநாடுகளில் ஜெயிலர் திரைப்படத்தை வெளியிட்டு இருக்கும் ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

முன்னதாக ஜெயிலர் திரைப்படத்தின் ரிலீசுக்கு முன்பு தனது இமயமலை ஆன்மீக பயணத்தை தொடங்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பினார். தமிழ் சினிமா இதுவரை கண்டிராத மெகா ஹிட் பிளாக் பஸ்டர் படமாக ரசிகர்கள் ஜெயிலர் திரைப்படத்தை கொண்டாடி வரும் நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அவர்கள் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்தித்து ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு காசோலை கொடுத்திருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை கலாநிதி மாறன் அவர்கள் சந்தித்து காசோலை வழங்கிய புகைப்படங்கள் தற்போது வெளிவந்து வெளிவந்துள்ளன. அந்த புகைப்படங்கள் இதோ…