ஜெயிலர் திரைப்படத்தின் இமாலய வெற்றியின் எதிரொலியாக இயக்குனர் நெல்சன் திலீப்குமார் அவர்களுக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அவர்கள் அட்டகாசமான சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடித்த கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவை இயக்குனராக களமிறங்கி தனக்கென தனி பாணியில் பக்கா டார்க் காமெடி ஆக்சன் என்டர்டைனிங் திரைப்படங்களை கொடுத்து தொடர்ந்து தனது படங்களின் வழியாக ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார் இயக்குனர் நெல்சன். தனது அடுத்த படமாக சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க இயக்குனர் நெல்சன் உருவாக்கிய டாக்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது. அதைத் தொடர்ந்து தளபதி விஜய் உடன் கைகோர்த்த இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படமும் வசூல் ரீதியில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஆனாலும் மறுபுறம் நிறைய எதிர்மறை விமர்சனங்களை இயக்குனர் நெல்சன் சந்தித்தார்.

மறுபுறம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த தர்பார் மற்றும் அண்ணாத்த ஆகிய திரைப்படங்கள் ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய தவறியது. இந்த மாதிரியான ஒரு சூழ்நிலையில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - இயக்குனர் நெல்சன் கூட்டணியில் ஜெயிலர் திரைப்படம் உருவானது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் முந்தைய திரைப்படங்களான எந்திரன், பேட்ட மற்றும் அண்ணாத்த ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து நான்காவது படமாக ஜெயிலர் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் அவர்கள் தயாரித்தார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் அவர்கள் நடித்திருக்கும் ஜெயிலர் திரைப்படத்தில், சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன், மிர்னா மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர். இதுபோக மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், நிர்மல் படத்தொகுப்பு செய்ய, ஜெயிலர் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

முதல் இரண்டு வாரத்தில் ஜெயிலர் திரைப்படம் கிட்டத்தட்ட 525 கோடிக்கு மேல் வசூலித்திருக்கும் நிலையில் தற்போது மூன்றாவது வார இறுதியில் வசூல் சாதனை படைத்திருக்கும் என தெரிகிறது. முன்னதாக ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றிக்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்தித்த தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அவர்கள் காசோலை வழங்கியதுடன் விலை உயர்ந்த பி எம் டபிள்யூ எக்ஸ் 7 ரக கார் ஒன்றை பரிசாக வழங்கி சர்ப்ரைஸ் கொடுத்தார். இந்த நிலையில் தற்போது இயக்குனர் நெல்சன் அவர்களையும் அழைத்து காசோலை வழங்கிய தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அவர்கள் இயக்குனர் நெல்சன் அவர்களுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ, PORSCHE உட்பட விலை உயர்ந்த கார்களை நிறுத்தி, அவரையே தேர்ந்தெடுக்க சொல்லி, அவர் தேர்ந்தெடுத்த PORSCHE காரை கலாநிதி மாறன், நெல்சனுக்கு பரிசளித்து இருக்கிறார். இந்த அட்டகாசமான நிகழ்வின் வீடியோ இதோ…