முதல்முறையாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள பக்கா ஆக்சன் என்டர்டெய்னர் படம் தான் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிக்க விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில் நிர்மல் படத்தொகுப்பு செய்திருக்கும் ஜெயிலர் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளிவந்த ஜெயிலர் திரைப்படத்தை ரசிகர்கள் ரிப்பீட் மோட்டில் கொண்டாடி வருகின்றனர். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை விசில் சத்தமும் ரசிகர்களின் அளவற்ற ஆரவாரமும் திரையரங்குகளை திருவிழாவாக மாற்றி வருகிறது. முன்னதாக ரிலீசான 4 நாட்களில் வெளிநாடுகளில் மட்டும் 105 கோடி ரூபாய் வசூலித்திருக்கும் ஜெயிலர் திரைப்படம் வரும் நாட்களில் இன்னும் பெரிய வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் ஒரு முக்கிய காட்சியின் படப்பிடிப்பின் போது துணை நடிகர் ஒருவர் ஒரு குறிப்பிட்ட வசனத்தை பேசுவதற்கு நிறைய டேக் எடுத்துக் கொண்டதால் அந்த நடிகருக்கு பதிலாக வேறு ஒரு நடிகரை மாற்றி அந்த காட்சி படமாக்கப்பட்டதாகவும் இதனை கவனித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அந்த துணை நடிகர் எவ்வளவு கனவுகளோடு வந்திருப்பார் அதை நாம் கெடுத்து விடக்கூடாது என உதவி இயக்குனர்களிடம் சொல்லி இயக்குனர் நெல்சன் இடம் பேசி அந்த துணை நடிகரை அந்த காட்சியில் தனக்கு அருகில் நிற்க வைத்து அவரது தோளில் கை போட்டு ஒரு வசனம் பேசி நடித்துக் கொள்கிறேன் என கேட்டு அந்த காட்சியை நடித்ததாக தெரிவித்திருந்தார். இந்த குறிப்பிட்ட காட்சி படத்தில் வந்த போது திரையரங்குகளில் அதனை குறிப்பிட்டு ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

இந்த நிலையில் அந்த குறிப்பிட்ட காட்சியில் நடித்த துணை நடிகர் சீனு தற்போது நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்தியேக பேட்டி கொடுத்திருக்கிறார். அந்த பேட்டியில், “அது எப்படி என்றால் கடவுளே தரிசனம் கொடுத்தது போல் இருந்தது. அவ்வளவு சந்தோஷமாக இருந்தது தலைவரே என் தோளில் கை போட்ட போது, அந்தப் படப்பிடிப்பு தளத்தில் பார்த்தீர்கள் என்றால் ஜெயில் செட் போட்டு இருக்கிறார்கள் நடிகர்கள் எல்லோரும் இருக்கிறார்கள் எல்லா ஷாட்டுகளும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் பார்த்து இருப்பீர்கள் கீழே எல்லோரும் நின்று கொண்டிருப்போம். அப்போது எனக்கு ஒரு சின்ன டயலாக் கொடுத்தார்கள் அதை நான் தயார் செய்து வைத்திருந்தேன். அப்போது திடீரென தலைவர் என்ட்ரி ஆகிறார். எல்லோரும் வரிசையாக நிற்கிறார்கள் ஒவ்வொருவரையும் பார்த்துக் கொண்டு வருகிறார் வந்து ஒரு வில்லனை மிரட்டி விட்டு திரும்பி ராஜாஜி ராஜன் இந்த ராஜா என்ற பாடலை பாடுவார் இப்போது அவர் அருகில் வரும் போது நான் என்னுடைய வரியை எடுக்க வேண்டும் அதற்குள் அவர் என்னை கிள்ளி முத்தம் கொடுத்து விட்டார் அதை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. அவ்வளவு சந்தோஷமாக இருந்தது அந்த சந்தோஷத்தில் நான் பேச வேண்டிய வார்த்தையை மறந்து விட்டேன்." என தெரிவித்துள்ளார். இன்னும் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்ட நடிகர் சீனு அவர்களின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.