கே ஜி எஃப் படங்களின் இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்து இயக்கும் அதிரடியான பிரம்மாண்ட திரைப்படத்தில் RRR நாயகன் ஜூனியர் என்டிஆர் கதையின் நாயகனாக நடிக்கும் NTR31 படத்தின் படப்பிடிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளி வந்துள்ளது. பாகுபலி படத்தின் மூலம் இந்திய சினிமாவின் நட்சத்திர இயக்குனராக உயர்ந்த பிரம்மாண்ட இயக்குனர் SS.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்து உலக அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்று படத்தின் இசைக்காக ஆஸ்கார் விருதும் பெற்ற RRR படத்தின் நாயகனாக திகழும் ஜூனியர் என்டிஆர் அவர்களுடன் அதிரடியான பிரம்மாண்ட படங்களை கொடுத்து வரும் இயக்குனர் பிரசாந்த் நீல் இணையும் NTR31 படத்தின் படப்பிடிப்பு குறித்த இந்த அறிவிப்பு இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தையும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னடத்தில் வெளிவந்து ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்து மெகா ப்ளாக் பஸ்டராக ரெகார்ட் பிரேக்கிங் வசூல் சாதனைகள் படைத்த திரைப்படங்களான கே ஜி எஃப் 1 & 2 படங்களின் இயக்குனர் பிரசாந்த் நீல் தனது அடுத்த பிரமாண்ட படைப்பாக சலார் படத்தை உருவாக்கி வருகிறார். முன்னணி தெலுங்கு நட்சத்திர நடிகரான பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ள சலார் பார்ட்-1 சீஸ்ஃபயர் திரைப்படத்தில் மலையாள நடிகர் ப்ரித்திவிராஜ் மிரட்டலான வில்லனாக நடித்துள்ளார். வருகிற டிசம்பர் 22ஆம் தேதி சலார் பார்ட்-1 சீஸ் ஃபயர் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் ஜூனியர் என்டிஆர் தனது திரைப் பயணத்தில் 30-வது திரைப்படமாக தயாராகும் தேவரா படத்தில் தற்போது கதையின் நாயகனாக நடித்து வருகிறார். தெலுங்கு சினிமாவின் மாஸ் இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் தேவரா படத்தில் பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் மிரட்டலான வில்லனாக நடித்து வருகிறார். தற்போது தேவரா திரைப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து தனது 31வது திரைப்படமாக உருவாகும் NTR31 திரைப் படத்தில் கேஜிஎப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் உடன் கைகோர்க்கிறார் ஜூனியர் என்டிஆர்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக பல பிளாக்பஸ்டர் திரைப்படங்களை தயாரித்த ஒரு முன்னணி தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த NTR31 திரைப்படத்தின் அறிவிப்பை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மேலும் அடுத்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் NTR31 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்ற அதிரடி அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து X பக்கத்தில், நடிகர் ஜூனியர் என்டிஆர் மற்றும் இயக்குனர் பிரசாந்த் நீல் இணைந்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, "எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்த ஜூனியர் என்டிஆர் மற்றும் இயக்குனர் பிரசாந்த் நீல் ப்ராஜெக்ட் அடுத்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்குகிறது. இந்திய சினிமாவில் ஒரு பென்ச் மார்க் படமாக அமைய இருக்கும் பெருமைமிக்க அதிரடியான படைப்பாக இது இருக்கும்" என குறிப்பிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த அதிரடி அறிவிப்பை கீழே உள்ள லிங்கில் காணலாம்.