எக்கச்சக்க எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியின் தளபதி 68 திரைப்படத்தில் நடிப்பது குறித்து முதல் முறையாக நடிகர் ஜெய் மனம் திறந்து பேசி இருக்கிறார். தற்சமயம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படமான லியோ திரைப்படத்தில் தளபதி விஜய் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெகு விரைவில் நிறைவடைந்து இந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் லியோ படம் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக பட குழுவினர் அறிவித்துள்ள நிலையில், சர்ப்ரைஸாக தளபதி விஜயின் 68வது திரைப்படமாக அடுத்து தயாராகும் தளபதி 68 படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் அறிவிப்பு வெளியானது. பிகில் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணைந்துள்ள ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் விஜயின் தளபதி 68 படத்தை தயாரிக்கிறது. ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த தளபதி விஜய் - யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி இப்படத்தில் இணைவது இன்னும் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.

தளபதி 68 படத்தின் இதர அறிவிப்புகள் லியோ திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகு வெளிவரும் என இயக்குனர் வெங்கட் பிரபு அறிவித்திருக்கும் நிலையில், வழக்கமாக இயக்குனர் வெங்கட் பிரபுவின் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள் பட்டாளத்தில் இருந்து யாரெல்லாம் இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் கிளம்பி உள்ளது. அந்த வகையில், தளபதி 68 படத்தில் இணைவது குறித்து நடிகர் ஜெய் மனம் திறந்து பேசி உள்ளார். முன்னதாக லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவடா இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள முக்கோண காதல் கதையாக தயாராகி உள்ள திரைப்படம் தான் தீராக் காதல். அதே கண்கள் மற்றும் பெட்ரோமேக்ஸ் படங்களின் இயக்குனர் ரோஹின் வெங்கடேசன் தீராக் காதல் திரைப்படத்தை இயக்கியுள்ளார். ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதிவில், பிரசன்னா.GK படத்தொகுப்பு செய்துள்ள தீராக் காதல் படத்திற்கு சித்து குமார் இசை அமைத்துள்ளார். வருகிற மே 26 ஆம் தேதி தீராக் காதல் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற தீராக் காதல் படத்தின் சிறப்பு நேர்காணலில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவடா மற்றும் இயக்குனர் ரோஹின் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு, பல சுவாரசிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில், நடிகர் ஜெயிடம் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்கும் தளபதி 68 படத்தில் உங்களை எதிர்பார்க்கலாமா என கேட்டபோது, “நானே இது என்னிடம் கேட்டு கொண்டேன் நேற்று இந்த படத்தில் என்னை எதிர்பார்க்கலாமா? என்று.. அந்த அறிவிப்பு வரும் வரையிலுமே இந்த விஷயங்களை வெங்கட் பிரபு அண்ணா ரகசியமாக தான் வைத்திருந்தார். ஒருவேளை பார்க்கலாம் நானும் விஜய் அண்ணாவுடன் ரொம்ப நாள் கழித்து ஒரு படம் பண்ண வேண்டும் என்று நினைத்து கேட்டுக் கொண்டிருந்தோம். வெங்கட் பிரபு அண்ணா படமும் நடித்து ரொம்ப நாள் ஆகிவிட்டது பார்ட்டிக்கு பிறகு நாங்கள் எந்த படமும் பண்ணவில்லை. எனவே ஒருவேளை அமைகிறதா என்று பார்ப்போம். ஒருவேளை நான் அதில் இருந்தால் கூட இப்போது என்னால் சொல்ல முடியாது.” என பதிலளித்தார். தொடர்ந்து அவரிடம் “தளபதி 68 படம் எந்த மாதிரியான ஒரு படமாக இருக்கும் மங்காத்தா மாதிரி ஒரு மாசான படமா? அல்லது சென்னை 28 மாதிரி ஜாலியான படமா? என கேட்டபோது, “கண்டிப்பாக தளபதிக்கு ஏற்ற மாதிரி ஒரு மாஸ் படமாக இருக்கும். அப்படித்தான் இருக்கும். இப்போது மாநாடு பார்த்தோம் அல்லவா.. அது ஒரு மாஸ் படம் ஆனால் திரைக்கதை புதிதாக இருந்தது. எனவே அது மாதிரி இதில் ஏதாவது அவர் புதிதாக செய்திருப்பார்." என பதிலளித்துள்ளார். நடிகர் ஜெயின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.