இந்தியத் திரையுலகின் இசை ஜாம்பவானாக விளங்கும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தொடர்ந்து ரசிகர்களை தனது இசை மழையால் மகிழ்வித்து கொண்டிருக்கிறார். அந்தவகையில் இந்திய சினிமாவின் பிரம்மாண்ட படைப்பாக இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

மேலும் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் பல வித்தியாசமான கெட்டப்புகளில் சீயான் விக்ரம் நடித்திருக்கும் கோப்ரா படத்திற்கு இசையமைத்துள்ள இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சிவகார்த்திகேயன் நடிப்பில் சயின்ஸ் ஃபிக்ஷன் காமெடி படமாக உருவாகியிருக்கும் அயலான் திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

இந்த மூன்று தமிழ் திரைப்படங்களின் இறுதிகட்ட பணிகள் தற்போது மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், கோப்ரா திரைப்படம் வருகிற மே 26-ம் தேதியும், விரைவில் அயலான் திரைப்படமும் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் இசைஞானி இளையராஜா இருவரும் இணைந்திருக்கும் புதிய புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இன்று இந்திய திரை இசையை உலகமே பாராட்டும் அளவிற்கு உயர்ந்ததற்கு இளையராஜா மற்றும் ஏ. ஆர்.ரஹ்மான் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். ஆரம்பக்கட்டத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசைஞானியிடம் பணியாற்றிய நிலையில் தற்போது மீண்டும் குரு-சிஷ்யன் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மானின் Firdaus ஸ்டுடியோவிற்கு இசைஞானி நேற்று(மார்ச் 6) வருகை புரிந்துள்ளார். இந்த சந்திப்பின் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மான் "தனது Firdaus ஸ்டுடியோவிற்கு மேஸ்ட்ரோ இளையராஜா அவர்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். எதிர்காலத்தில் எங்களது ஸ்டூடியோவில் இசையமைப்பு பணிகளை மேற்கொள்வார் என எதிர்பார்க்கிறேன்" என தெரிவித்துள்ளார். தற்போது இதற்கு பதிலளித்துள்ள இளையராஜா, “விரைவில் இசையமைப்பு தொடங்கும்” என பதிவிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் ட்ரென்ட் ஆகி வரும் இசைஞானி-இசைப்புயலின் புகைப்படம் இதோ…

Such a pleasure welcoming the Maestro @ilaiyaraaja to our Firdaus Studio... Hope he composes something amazing for our @FirdausOrch to play in the future! pic.twitter.com/oam4TJPL63

— A.R.Rahman (@arrahman) March 6, 2022