ஐதராபாத்தில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்குப் பஞ்சாயத்து பேசிய ஊர் பெரியவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஐதராபாத் ரச்சகொண்டா பகுதியில் பிரசாந்த் ரெட்டி என்பவருக்குச் சொந்தமான கோழிப்பண்ணையில், பழங்குடியினப் பெண்ணும், அவரது கணவரும், இவர்களுடன் சுரேஷ் என்பவரும் பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில், கோழிப்பண்ணையில் கோழிகளுக்கு உணவு வாங்கியதில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக சுரேஷ் என்பவரை, பண்ணை ஆட்கள் கடுமையாகத் தாக்கி உள்ளனர்.

இதனையடுத்து, கோழிகளுக்கு உணவு அளித்த பழங்குடியினப் பெண்ணை, பிரசாந்த் ரெட்டி உட்பட மொத்தம் 5 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், அந்த பெண்ணின் கணவரைத் தனி அறையில் அடைத்து வைத்து, கடுமையாகத் தாக்கி உள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, பழங்குடியினப் பெண்ணின் கணவரைத் தனியாக அழைத்து, பஞ்சாயத்துப் பேசி அவருக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் தருவதாகவும் கூறி, அவரை மிரட்டி கையெழுத்து வாங்கி உள்ளனர்.

இதனால், அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரது கணவரும் போலீசாரிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து, கூட்டுப் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட பிரசாந்த் ரெட்டி உட்பட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அத்துடன், பாதிக்கப்பட்டவர்களை மிரட்டி பஞ்சாயத்து பேசிய ஊர் தலைவர்கள் மற்றும் பெரியவர்கள் உட்பட மொத்தம் 9 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள சந்திரசேகர் ரெட்டியை போலீசார் தேடி வருகின்றனர்.