எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் வித்தியாசமான சூப்பர் ஹீரோ படமாக வெளிவர இருக்கும் வீரன் திரைப்படத்தின் கதை குறித்த ருசிகர தகவல் வெளியாகியிருக்கிறது. இன்றைய தலைமுறை ரசிகர்களின் மோஸ்ட் ஃபேவரட் சினிமா நட்சத்திரமாக திகழும் ஹிப் ஹாப் தமிழா ஆதி அடுத்ததாக PT Sir எனும் படத்தில் தற்போது நடித்து வருகிறார். விளையாட்டு ஆசிரியர் கதாபாத்திரத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்து வரும் PT Sir திரைப்படத்தை நெஞ்சமுண்டு நேர்மையுண்டு திரைப்படத்தின் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கி வருகிறார். கோயமுத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டு வரும் PT Sir திரைப்படத்தை வெந்து தணிந்தது காடு படத்தின் தயாரிப்பாளர் ஐசரி.கே.கணேஷ் அவர்களின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.

இதனிடையே சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் இணைந்து தயாரித்துள்ள வித்தியாசமான சூப்பர் ஹீரோ திரைப்படமாக தயாராகி இருக்கும் வீரன் படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடித்துள்ளார். முன்னதாக நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற மின்னல் முரளி திரைப்படத்தின் பாணியில் உருவாகியுள்ள வீரன் திரைப்படத்தை மரகத நாணயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த இயக்குனர் ARK.சரவண் எழுதி இயக்கியுள்ளார். ஹிப் ஹாப் தமிழா ஆதியுடன் இணைந்து வினய், ஆதிரா ராஜ், முனீஸ் காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் வீரன் திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தீபக் D மேனன் ஒளிப்பதிவில் பிரசன்னா.GK படத்தொகுப்பு செய்ய, வீரன் திரைப்படத்திற்கு மகேஷ் மேத்யூ ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

பிரபல தயாரிப்பு நிறுவனமான சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் வெளியிட வருகிற வெள்ளிக் கிழமை ஜூன் 2ம் தேதி வீரன் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த ஹிப்ஹாப் தமிழா ஆதியின் வீரன் திரைப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் வீரன் திரைப்படத்தின் கதை (SYNOPSIS) தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. “கதையின் நாயகனான குமரன் 15 வயது சிறுவனாக வீரனூர் எனும் கிராமத்தில் வசிக்கும் போது மின்னலால் தாக்கப்பட்டு சிறிய கோமா நிலைக்கு செல்கிறான். உடல்நிலை சரியான பிறகு அவனுடைய சகோதரி அவனை சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்கிறார். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவன் அந்த மின்னல் தாக்கப்பட்டதால் அவனுக்கு மின்னலின் சக்தி மற்றும் மனதை கட்டுப்படுத்துவது போன்ற சூப்பர் பவர்கள் இருப்பதாக உணர்கிறான்.” அதன் பிறகு நடப்பதை மீதி கதை என்பது போன்று தற்போது சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இந்த தகவல்கள் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யும் தளமான புக் மை ஷோ மற்றும் இதர பிற தளங்களில் வீரன் திரைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.