இந்திய சினிமாவில் இந்த ஆண்டு வெளியாகவுள்ள மிக பெரிய திரைப்படம் மணி ரத்னம் அவர்களின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் பாகம் 2. கல்கியின் வரலாற்று புனைவு கதையான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்ட பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. வசூலிலும் உலகளவில் சாதனையும் படைத்தது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து இந்த ஆண்டு லைகா தயாரிப்பு நிறுவனத்துடன் மணி ரத்னம் அவர்களின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்து சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, விக்ரம் பிரபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகவிருக்கும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே வருகின்றது.

முன்னதாக இரண்டாம் பாகத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய அளவு ரசிகர்கள் ஆதரவை பெற்று இன்றும் இணையத்தில் முன்னிலையில் இருந்து வருகிறது. கொண்டாட்டங்களுடன் வரவேற்கப்படும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் படம் வரும் ஏப்ரல் 28 ம் தேதி உலகமெங்கும் பல மொழிகளில் வெளியாகவுள்ளது. இதற்கான இறுதிகட்ட வேலையில் படக்குழு ஒருபுறம் தீவிரமாக இறங்க மறுபுறம் படத்திற்கான சென்சார் சான்றிதழை வழங்கியுள்ளது படக்குழு..

சென்சார் குழு வழங்கியுள்ள சான்றிதழ் படி பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் 2 மணி நேரம் 44 நிமிடம் வரை படத்தின் ரன்னிங் டைம் உள்ளது. மேலும் அதில் படத்தில் இடம் பெற்றுள்ள கற்பனை – பொறுப்பு துறப்பு பக்கத்தை மேலும் தெரியும்படி பெரிதாக போடும் படி அறிவுறுத்தியுள்ளனர். மேலும் ‘ரத்த’ என்ற வார்த்தையை மாற்றியமைக்கும்படியும் மேலும் சில சிறப்பு காட்சிகளின் காட்சிகளில் திருத்தங்களையும் பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பான சான்றிதழ் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

முதல் பாகத்திற்கு கிடைத்ததை விட இரண்டாம் பாகத்திற்கு தனி எதிர்பார்ப்பு மக்களிடம் எழுந்துள்ளது. நிச்சயம் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்தி படுத்தும் என்று எதிர்பார்க்கபடுகிறது.