காது கேட்காத, வாய் பேச முடியாத பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மாற்றுத்திறனாளியை போலீசார் கைது செய்தனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் அடுத்த அம்ராய்வாடி பகுதியைச் சேர்ந்த காது கேட்காத, வாய் பேச முடியாத 23 வயது பெண், கடந்த 1 ஆம் தேதி வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளார். இதனையடுத்து, அந்த பெண்ணின் பெற்றோர் அவரை காணாமல் தேடிவந்த நிலையில், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து, 2 நாட்களுக்குப் பிறகு அதே பகுதியைச் சேர்ந்த மங்கேஷ் பரத்வாஜ் என்ற மாற்றுத்திறனாளி, தனது மூன்று சக்கர வாகனத்தில் அந்தப் பெண்ணை, அவளது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது, அருகில் உள்ள மைதானத்தில் அந்தப் பெண் இருந்ததாகவும், தாம் அவரைப் பார்த்து அங்கு அழைத்து வந்ததாகவும் கூறியுள்ளார்.

அப்போது, அந்த பெண்ணின் ஆடைகள் கிழிந்தும், கறைபட்டும் இருந்ததைப் பார்த்த அவருடைய பெற்றோர், மங்கேஷை நம்பாமல் சந்தேகப்பட்டனர். இதனைத்தொடர்ந்து, அந்த குறிப்பிட்ட மைதானத்திற்கு இந்த பெண்ணை அழைத்துச்சென்ற அவரது பெற்றோர், அங்கிருந்தவர்களிடம் விசாரித்துள்ளனர். அதில், இந்த பெண்ணை 2 நாட்களுக்கு முன்பு மாற்றுத்திறனாளி ஒருவர் அழைத்துச் சென்றாக தெரிவித்தனர்.

இதனையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, மாற்றுத்திறனாளி மங்கேஷை கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனிடையே, அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அந்தப் பெண்ணை அவர் பாலியல் பலாத்காரம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.