குஜராத்தில் பேருந்து கவிழ்ந்து சம்பவ இடத்திலேயே 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் பனாஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள அம்பாஜி - டன்ட்டா சாலையில் சுமார் 71 பயணிகளுடன் தனியார் சொகுசு பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது, திரிசுலா மலைப்பகுதியில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, நிலை தடுமாறி சாலையில் ஓரமாக இருந்த பக்கவாட்டில் மோதி, அருகிலுள்ள பள்ளத்தாக்கில் தலை குப்பர கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், 4 குழந்தைகள், 3 பெண்கள் உட்பட மொத்தம் 21 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 50 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்து குறித்து விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்த 50 பேரையும் மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில், சிலர் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாகவும், இதனால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்றும் அஞ்சப்படுகிறது.

விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்குப் பிரதமர் நரேந்திர மோடி, இரங்கல் தெரிவித்துள்ளார்.