ஓசூரில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பகுதியில் திருட்டு சம்பவங்களும், வழிப்பறி சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்தன. இதனை போலீசார் ரகசியமாகக் கண்காணித்து வந்தனர்.

அதன்படி, ஆட்கள் இல்லாத வீட்டை நோட்டம் பார்த்துக் கொள்ளையடிப்பது, பெண்கள் மற்றும் வயதானவர்களிடம் இருசக்கர வாகனங்களில் சென்று ஜெயின் பறிப்பது, முதியவர்களிடம் கத்தியைக் காட்டி பணம் பறிப்பது உள்ளிட்ட செயல்களில் தொடர்புடையவர்களாக சதாம், இம்ரான்கான் ஆகிய 2 பேரும் கை தேர்ந்தவர்கள் என்பதை போலீசார் கண்டறிந்தனர்.

22 வயதான இந்த 2 பேர் மீதும் ஏற்கனவே 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனையடுத்து, மீண்டும் அவர்கள் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் பரிந்துரைப்படி இந்த 2 இளைஞர்களையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார், சேலம் மத்தியச் சிறையில் அடைத்தனர்.