பிரம்மாண்டமான திரைப்படம் என்றாலே பார்வையாளர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு தன்னாலே உருவாகிவிடும். அந்த பிரம்மாண்ட எதிர்பார்ப்பு கொண்ட சில படங்களில் முக்கிய படமாக உருவாகி வரும் திரைப்படம் சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் 'சூர்யா 42' திரைப்படம். இயக்குனர் சிவா சிறுத்தை படம் மூலம் அறிமுகமாகி பின் நடிகர் அஜித் குமாரை வைத்து நான்கு படங்களை இயக்கி உள்ளார். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 'அண்ணாத்த' திரைப்படத்தை இயக்கி அதன்படி தமிழ் சினிமாவில் முன்னனி இயக்குனராக அறியப்படுகிறார். தற்போது சிறுத்தை சிவா சூர்யாவுடன் கூட்டணி அமைத்துள்ளார். சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பத்தானி நடிக்கிறார். பிரபல பாடலாசிரியர் மற்றும் வசனகர்த்தா மதன் கார்க்கி இப்படத்திற்கு வசனம் எழுதுகிறார். ஒளிப்பதிவாளர் வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்ய தேவி ஸ்ரீபிரசாத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். வரலாற்று பிண்ணனியில் நிகழ்காலம் கலந்து உருவாகவுள்ள இப்படம் முழுக்க முழுக்க 3D தொழில்நுட்பத்தில் உருவாகி வருகிறது. மேலும் இப்படம் 10 மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக படத்திற்கான மோஷன் போஸ்டர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு படக்குழு வெளியிட்டது. பல போர் படைகளுக்கு நடுவே போர்களத்தில் வீரன் ஒருவன் கோடாரி ஏந்தி நிற்பது போல காட்சியமைக்கப்பட்ட அந்த மோஷன் போஸ்டர் அதிக அளவு பேசப்பட்டது. ரசிகர்கள் அனைவராலும் வரவேற்கப்பட்டது. அதன்படி அந்த திரைப்படத்திற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தது.

இந்நிலையில் சூர்யா 42 படத்திற்கான அடுத்த அப்டேட் விரைவில் அறிவிக்கப்படும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் குழுவில் ஒருவரான மற்றும் பிரபல தயாரிப்பாளருமான தனஞ்செயன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர் சூர்யா 42 படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து, சூர்யா ரசிகர்கள் அந்த பதிவை அதிகளவு பகிர்ந்து சூர்யா 42 படத்திற்கான எதிர்பார்ப்பின் வெளிபாட்டை டிவிட்டரில் தெரிவித்து வருகின்றனர்.

சூர்யா தனது இரண்டாவது இன்னிங்க்ஸில் வெளியாகும் திரைப்படங்கள் பெரும்பாலும் வெற்றியையே அவருக்கு கொடுத்து வருகிறது, தொடர் வெற்றியை சூர்யா ரசிகர்கள் பார்த்து வருவதால் பிரம்மாண்டமாக உருவாகி வரும் சூர்யா 42 திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி பெரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். மேலும் இந்த படம் முடிந்து சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் ஏற்கனவே முன்னேற்பாடுகளை முடித்து வைத்துள்ள 'வாடிவாசல்' திரைப்படத்தில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.