ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் முதல் முறை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதை நாயகனாக நடிக்கும் தலைவர் 170 திரைப்படத்தில் தென்னிந்திய சினிமாவின் மிக முக்கிய நடிகர்களான பகத் பாஸில் மற்றும் ராணா டகுபதி ஆகியோர் இணைந்துள்ளனர். இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகர்களில் ஒருவராக விளங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று 600 கோடிக்கு மேல் வசூலித்தது. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றன. அந்த வகையில் தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் மொய்தின் பாய் எனும் மிக முக்கிய கௌரவ வேடத்தில் லால் சலாம் திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். கிரிக்கெட்டை மையப்படுத்திய ஸ்போர்ட்ஸ் படமாக வெளிவர இருக்கும் இந்த லால் சலாம் திரைப்படம் வருகிற 2024 ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு நீண்ட காலமாக ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த தலைவர் 171 படத்தில் இந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 170 வது திரைப்படமாக உருவாகும் தலைவர் 170 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கி இருக்கிறது. நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய பாராட்டுகளைப் பெற்ற ஜெய் பீம் திரைப்படத்தின் இயக்குனர் TJ.ஞானவேல் எழுதி இயக்கும் இந்த தலைவர் 170 திரைப்படமும் ஜெய் பீம் போலவே உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படும் திரைப்படமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பேட்ட, தர்பார் மற்றும் ஜெயிலர் படங்களை தொடர்ந்து 4வது முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 170 படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.

தலைவர் 170 திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து முதல் முறையாக நடிகை மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக நடிக்கிறார். மேலும் சார்பட்டா பரம்பரை படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை துஷாரா விஜயன் மற்றும் இறுதி சுற்று ஓ மை கடவுளே உள்ளிட்ட படங்களில் ரசிகர்களை கவர்ந்த நடிகை ரித்திகா சிங் ஆகியோரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று அக்டோபர் 3ம் தேதி திருவனந்தபுரத்தில் தலைவர் 170 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டிருக்கிறது. படப்பிடிப்பிற்கு செல்வதற்கு முன்பு பத்திரிகையாளர்களை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், “இந்த திரைப்படம் ஒரு நல்ல கருத்துள்ள பிரம்மாண்டமான பொழுதுபோக்கு படமாக இருக்கும்” என தெரிவித்திருக்கிறார். இதனிடையே கடந்த ஓரிரு தினங்களாக “தலைவர் 170 ஸ்குவாட்” என்ற பெயரில் இப்படத்தில் பணியாற்றும் படக்குழுவினர் குறித்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் மிக முக்கிய நடிகர்களாக விளங்கும் ஃபகத் பாஸில் மற்றும் ராணா டகுபதி ஆகியோர் தற்போது தலைவர் 170 திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களோடு இணைந்து நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ...

Welcoming the incredibly versatile talent 🎭 Mr. Fahadh Faasil ✨ on board for #Thalaivar170🕴🏼#Thalaivar170Team gains a powerful new addition with the astonishing performer 🤨 #FahadhFaasil joining them. 🎬🤗🌟@rajinikanth @tjgnan @anirudhofficial @RanaDaggubatipic.twitter.com/cOYwaKqbAL

— Lyca Productions (@LycaProductions) October 3, 2023