காதலியின் தந்தையைக் கொன்ற காதலன் வி.ஏ.ஓ.விடம் சரணடைந்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் கணபதிநகரைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் 15 வயது மகள், புஞ்சை புளியம்பட்டியில் செயல்பட்டு வரும் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அங்கே கூட வேலை செய்யும் 20 வயது முருகேஷ் என்பவருடன், காதல் வயப்பட்டு, இருவரும் பழகி வந்துள்ளனர்.

இதனையடுத்து, கடந்த மே மாதம் அந்த இளம் பெண்ணை, ஆசை வார்த்தைகள் கூறி முருகேஷ் வெளியே அழைத்துக்கொண்டு சென்றுள்ளார்.அப்போது, இளம் பெண்ணின் தந்தை ஜெயராஜ் கண்ணில் இவர்கள் இருவரும் படவே, இருவரையும் கூப்பிட்டுக் கண்டித்துள்ளார்.

மேலும், தன்னுடைய 15 மைனர் பெண்ணை முருகேஷ்கடத்தியதாகவும், இளம் பெண்ணின் தந்தை புஞ்சை புளியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.

இதனைத்தொடர்ந்து வெளியே வந்த முருகேஷ், கடந்த 1 ஆம் தேதி புஞ்சை புளியம்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்துவதற்காக வந்துள்ளார். அப்போது, அங்கே ஜெயராஜ் இருந்துள்ளார். அப்போது இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இதில் ஆத்திரமடைந்த முருகேஷ், கீழே கிடந்த இரும்புக்கம்பியால் ஜெயராஜை கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் ஜெயராஜ், சரிந்து விழுந்தார். இதனையடுத்து, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின் உயர் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பாக ஜெயராஜ் மனைவி ரோஸ்மேரி, புஞ்சை புளியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், முருகேஷ் மீது அடிதடி வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரித்து வந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜெயராஜ், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, சில நாட்கள் தலைமறைவாக இருந்த முருகேஷ், தற்போது
புஞ்சை புளியம்பட்டி வி.ஏ.ஓ. சுரேஷ் பாபுவிடம் சரணடைந்தார்.

இதனையடுத்து, அவர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.