உலக அளவில் பல கோடி சினிமா ரசிகர்களுக்கும் பல நாடுகளைச் சேர்ந்த திரைப்பட கலைஞர்களுக்கும் உயரிய விருதாக திகழ்வது ஆஸ்கார் விருதுகள். அந்த வகையில் 95 ஆவது ஆஸ்கார் விருதுகள் இன்று மார்ச் 13ஆம் தேதி நடைபெற்றது. இதில் எவ்ரிதிங் எவ்ரி வேர் ஆல் அட் ஒன்ஸ் திரைப்படம் சிறந்த திரைப்படமாக ஆஸ்கார் விருது பெற்றது. இப்படத்தின் இயக்குனர்கள் டேனியல் குவான் மற்றும் டேனியல் ஸ்கிய்னெர்ட் ஜோடி சிறந்த இயக்குனர்களுக்கான ஆஸ்கார் விருதை பெற்றனர்.

சிறந்த நடிகராக தி வேல் படத்திற்காக பென்டன் ஃபிரேசர் விருது பெற, மிச்செல் யோ எவரிதிங் எவ்ரி வேர் ஆல் அட் ஒன்ஸ் படத்திற்காக சிறந்த நடிகை விருதை தட்டிச் சென்றார். மேலும் சிறந்த துணை நடிகர், துணை நடிகை, சிறந்த ஒரிஜினல் திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு ஆகிய 7 பிரிவுகளிலும் எவரிதிங் எவ்ரி வேர் ஆல் அட் ஒன்ஸ் திரைப்படம் ஆஸ்கார் விருதுகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நமது இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டு வெளிவந்த பிளாக்பஸ்டர் ஹிட்டான RRR திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்காக இசை அமைப்பாளர் MM.கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கார் விருதை வென்றனர்.

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த ஆவண குறும்படத்துக்கான விருதை இந்தியாவின் The Elephant Whisperers படம் வென்றுள்ளது. முன்னதாக இந்த பிரிவில் The Elephant Whisperers, Haulout, How Do You Measure a Year?, The Martha Mitchell Effect, Stranger at the Gate இந்த 5 படங்கள் போட்டியிட்ட நிலையில் ஆஸ்கர் விருது The Elephant Whisperers படத்துக்கு கிடைத்துள்ளது. இந்த படத்தை கார்த்திகி கோன்சால்வ்ஸ் இயக்கியிருந்தார். கடந்தாண்டு டிசம்பர் 8 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக குட்டி யானைகளின் பராமரிப்பு குறித்தும், அதை குடும்பத்தில் ஒருவராக பாவிக்கும் பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதிகள் குறித்தும் இந்த குறும்படத்தின் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.

ஆஸ்கர் விருது பெற்றது தொடர்பாக பேட்டியளித்த பெள்ளி, ”ரகு தருமபுரியில் இருந்தும், பொம்மி சத்தியமங்கலத்தில் இருந்தும் வந்தது. ரகு யானை குட்டி வளர்க்க அழைத்தார்கள். அதற்கு வால் வெட்டப்பட்டு இருந்ததால், அதனை வளர்க்க முடியாது என முதலில் சொன்னேன். முடிந்தளவு பார்க்கலாம், எப்படியாவது சரி செய்து விடலாம் என வீட்டில் சொன்னார்கள். ரகுவை வளர்த்து பெரிதாக்கினோம். அப்போது 3 மாத குட்டியாக பொம்மி வந்தது. அதற்கு பால் கொடுத்து வளர்த்தோம். இதைப்பற்றிய ஆவணப்பட்டம் விருது பெற்று இருப்பது சந்தோஷம். முதுமலையில் இருப்பவர்களுக்கும், வனத்துறையினருக்கும் சந்தோஷம் அடைந்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.