தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் அஜித்குமாரின் துணிவு திரைப்படம் இந்த 2023 ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக நேற்று ஜனவரி 11ஆம் தேதி உலகெங்கிற்கும் திரையரங்குகளில் ரிலீஸானது. 8 ஆண்டு இடைவெளிக்கு பிறகு அஜித்குமாரின் துணிவு திரைப்படத்துடன், தளபதி விஜயின் வாரிசு திரைப்படமும் ரிலீஸாகி இருப்பதால் தமிழ் சினிமா ரசிகர்கள் இரண்டு படங்களையும் கொண்டாடி வருகின்றனர்.

நேர்கொண்ட பார்வை & வலிமை ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள துணிவு திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹாட்ரிக் ஹிட் அடித்துள்ளது. போனி கபூர் தயாரித்துள்ள துணிவு படத்தை உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அனைத்து தரப்பு ரசிகர்களும் விரும்பும் வகையில் அதிரடி ஆக்சன் படமாக வெளிவந்திருக்கும் இந்த துணிவு திரைப்படம் இந்த பொங்கல் விடுமுறையில் ரசிகர்களுக்கான சரியான கொண்டாட்டமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனிடையே நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் துணிவு படத்தின் படத்தொகுப்பாளர் விஜய் வேலுகுட்டி பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அந்த வகையில் துணிவு திரைப்படத்தில் மிகவும் சவாலான விஷயங்கள் குறித்து பேசியபோது, “நீங்கள் ட்ரெய்லரில் கூட பார்த்திருப்பீர்கள் கடலில் படகில் செல்லும் ஒரு ஆக்ஷன் காட்சி இடம் பெற்று இருக்கும். அந்த காட்சியை படத்தொகுப்பு செய்யும்போது மிகவும் சவாலாக இருந்தது. அந்த ஒரு காட்சியை எடிட் செய்து முடிப்பதற்கு கிட்டத்தட்ட 20 முதல் 25 நாட்கள் வரை எடுத்தது. இயக்குனர் கூட இன்னும் முடியவில்லையா என்று கேட்டார். ஆனால் அந்த காட்சி மிகவும் சவாலாக இருந்தது.” என விஜய் வேலு குட்டி தெரிவித்துள்ளார் இன்னும் பல சுவாரசியங்கள் பகிர்ந்து கொண்ட துணிவு பட படத்தொகுப்பாளரின் முழு பேட்டி இதோ…