மலையாள சினிமாவில் நடிகராக களமிறங்கி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என எல்லா மொழிகளிலும் மிக முக்கிய நடிகராக ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாக திகழ்பவர் துல்கர் சல்மான். அந்த வகையில் துல்கர் சல்மான் நடிப்பில் அடுத்து ரிலீஸ்க்கு தயாராகி வரும் திரைப்படம் தான் கிங் ஆஃப் கொத்தா. துல்கர் சல்மானின் வேஃபரர் ஃபிலிம்ஸ் மற்றும் ஜி ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்க மலையாளத்தில் தயாராகி, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் PAN INDIA படமாக வெளிவர இருக்கும் கிங் ஆஃப் கொத்தா படத்தை அறிமுக இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ளார்.

தனது திரைப்பயணத்தில் முற்றிலும் மாறுபட்ட அதிரடி கேங்ஸ்டர் அவதாரத்தில் 1980களில் நடைபெறும் கதைக்களத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள கிங் ஆப் கொத்தா படத்தில் நடிகர் சுரேஷ் கோபியின் மகன் கோகுல் சுரேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, ஐஸ்வர்யா லெக்ஷ்மி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் செம்பன் வினோத் ஜோஸ், பிரசன்னா, ஷம்மி திலகன், அனிகா சுரேந்திரன், நைலா உஷா, சாந்தி கிருஷ்ணா, சுதி கொப்பா, செந்தில் கிருஷ்ணா, சரண் சக்தி, ராஜேஷ் ஷர்மா மற்றும் சார்பட்டா பரம்பரை படத்தில் டான்சிங் ரோஸாக அசத்திய சபீர் கல்லாரக்கல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நடிகை ரித்திகா சிங் கிங் ஆஃப் கொத்தா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

இந்த 2023 ஆம் ஆண்டு ஓணம் பண்டிகை பரிசாக துல்கர் சல்மானின் கிங் ஆஃப் கோத்தா திரைப்படம் வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில் சென்னையில் உள்ள ஒரு பெரிய மாலில் கிங் ஆஃப் கொத்தா திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய துல்கர் சல்மான் பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அந்த வகையில்,

"ஹே சினாமிகா படம் மாதிரி ஒரு முழு நீள தமிழ் படம் எப்போது அடுத்து நடிக்கப் போகிறீர்கள்?" எனக் கேட்டபோது, "இப்போது என்னமோ நிறைய வருகிறது கட்டாயமாக ரெண்டு அட்டகாசமான படங்கள் வர இருக்கின்றன. "என தெரிவித்தார் தொடர்ந்து பேசியபோது உங்கள் அப்பாவை தவிர உங்களுக்கு மிகப் பிடித்த நடிகர் யார்? எனக் கேட்டபோது, "தமிழில் நடிகர் சூர்யா நீண்ட காலமாக நான் அவருக்கு ரசிகராக இருக்கிறேன். கண்டிப்பாக ரஜினி சார், கமல் சார் ஒருவரை சொல்வது மிகவும் கடினம் எங்க ஊரில் கூட எனக்கு சேஃபான பதில் அப்பா பெயரை சொல்வது தான்." என்றார். தொடர்ந்து பேசிய அவரிடம், "சூர்யா சாரும் நீங்களும் சேர்ந்து ஒரு படம் நடிக்க போகிறீர்கள் என கேள்விப்பட்டோம்?" எனக் கேட்ட போது, "யார் சொன்னார்கள்... அப்படியா நானும் கேள்விப்பட்டேன்" என்றார். மீண்டும் அவரிடம், "நடிக்கிறீர்களா இல்லையா?" என கேட்டபோது, "நாம் கிங் ஆஃப் கொத்தா படம் பற்றி பேசுவோமே" என அந்த கேள்விக்கு பதில் அளிக்காமல் நழுவி விட்டார். எனவே துல்கர் சல்மான் உண்மையை உடைத்து இல்லை என பதில் சொல்லாததால் மறைமுகமாக ஆம் என்று தான் சொல்கிறார் என தற்போது ரசிகர்கள் உற்சாகமடைந்து இருக்கின்றனர். இருப்பினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. துல்கர் சல்மான் பேசிய அந்த வீடியோ இதோ...