தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களை இயக்கி முக்கியமான இளம் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். தமிழில் 'போடா போடி' படம் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலே கவனம் ஈர்த்தவர் விக்னேஷ் சிவன் பின் நீண்ட நாள் கழித்து 'நானும் ரௌடி தான்' படத்தின் மூலம் மிகப்பெரிய என்ட்ரி கொடுத்து முக்கிய இயக்குனரானார். பின் தொடர்ந்து சூர்யா, விஜய் சேதுபதி போன்ற முன்னணி ஹீரோக்களுடன் கூட்டணி அமைத்து ஹிட் படங்களை கொடுத்தார். முன்னதாக இவர் இயக்கத்தில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. கலகலப்பான ஃபீல் குட் படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இதனிடையே லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாராவை காதலித்து மணந்தார். இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரபல இயக்குனராக தமிழ் சினிமாவில் வலம் வரும் விக்னேஷ் சிவன் சமூக ஊடகங்களில் அதிக ஈடுபாடுடன் இருப்பவர். இந்நிலையில் விக்னேஷ் சிவன் அவர்களின் டிவிட்டர் கணக்கு கடந்த மார்ச் 14 ம் தேதி ஹேக் செய்யப்பட்டது. மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்ட விக்னேஷ் சிவன் டிவிட்டர் கணக்கு சர்க்கிள் என்ற பெயரில் மாற்றம் செய்யப்பட்டது. இதுகுறித்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "யார் இந்த சர்க்கிள் என கேள்வி எழுப்பி தன்னுடைய டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக ரசிகர்களுக்கு தெரிவித்தார். தற்போது அவரது டிவிட்டர் கணக்கு மீண்டும் அவரது கைக்கு வந்துள்ளதை தன் குழந்தையுடன் இருக்கும் அழகான புகைப்படத்துடன் பதிவேற்றி அதில்,

"எனது டிவிட்டர் கணக்கு இன்று மீண்டும் கைக்கு வந்தது, ஆனால் உண்மையிலே கடந்த வாரம் நான் நிம்மதியுடன் இருந்தேன். யார் என் கணக்கை ஹேக் செய்தார்களோ அவர்களுக்கு நன்றி! அப்பப்போ பண்ணுங்க.." என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் அந்த பதிவினை அதிகளவு பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் லைகா தயாரிப்பில் அஜித் குமாரின் 62 வது படமான AK62 படம் எடுக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியானது. ஆனால் இதுவரை அதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் தரப்பிலோ விக்னேஷ் சிவன் தரப்பிலோ எந்தவொரு அறிவிப்பும் வராமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.