போடா போடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தொடர்ந்து நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல் என தொடர்ச்சியாக தரமான பீல் கொண்டு திரைப்படங்களை கொடுத்து வரும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது திரைப் பயணத்தில் 6வது திரைப்படமாக உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தை இயக்க உள்ளதாகவும் இப்படத்தில் கோமாளி மற்றும் லவ் டுடே திரைப்படங்களில் இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர்.

முன்னதாக ரசிகர்களின் ஃபேவரட் செலிபிரிட்டி ஜோடியாக வலம் வரும் இயக்குனர் விக்னேஷ் சிவன் - நடிகை நயன்தாரா ஜோடியின் திருமணம் கடந்த (2022)ஆண்டில் மிகக் கோலாகலமாக நடைபெற்றது. மகாபலிபுரத்தில் நடைபெற்ற இந்த திருமணத்தில் இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களும் பிரபலங்களும் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் அழகான இரண்டு ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர்களாகினர். மேலும் இந்த அழகிய ஆண் குழந்தைகள் இருவருக்கும் உயிர் ருத்ரோநீல் N சிவன் மற்றும் உலக் தெய்விக் N சிவன் என பெயரிட்டதாகவும் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற விக்னேஷ் சிவன் ரசிகர்கள் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் விக்னேஷ் சிவன் திரை பயணத்திலும் தனது வாழ்க்கை பயணத்திலும் நடக்கும் பல சுவாரசியங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், தனது குழந்தைகள் குறித்து பேசியபோது, "ஜாலியாக இருக்கிறது... நேரம் பறக்கிறது... நம் ஓட்டுகிற வண்டியின் வேகம் குறைகிறது. சாப்பிடும் சாப்பாட்டின் அளவு குறைகிறது. மிகவும் அமைதியாகி விடுகிறோம். எப்போதாவது அழுத்தமான அல்லது பயப்படக்கூடிய சூழ்நிலையில் இருந்தாலும் கூட அவர்களை தூக்கி கையில் வைக்கும் போது, பயங்கரமாக… சரி விடு பார்த்துக் கொள்ளலாம், இதற்கு மேல் என்ன வேண்டும் என்பது போல் இருக்கும். குழந்தைகளோடு இருப்பவர்களுக்கு அதனுடைய உணர்வு புரியும்." என தெரிவித்தார்

தொடர்ந்து அவரிடம் அப்படி என்றால் இதனால்(குழந்தைகள் வந்ததால்) அடுத்து வரக்கூடிய படைப்புகளில் தாக்கம் இருக்கும் அல்லவா? எனக் கேட்டபோது, “எப்போதுமே நாம் நன்மைகளாக நினைக்காமல் இருப்பது நல்லது. இதனால் இது நன்றாக நடக்கும். அதனால் இது நன்றாக நடக்கும், அப்படி இல்லாமல் அதுவே ஒரு நன்றாக நடக்கக் கூடிய விஷயம்தான். அதுவே போதும் அதுவே ஒரு நன்மை தான். இதனால் இப்படி ஒரு நல்ல விஷயம் நடக்கும் என நாம் நினைத்தோம் என்றால் அது ஒரு தொடர் நிகழ்வாக நடந்து கொண்டே இருக்கும். எந்த புள்ளியில் நாம் சந்தோஷப்பட வேண்டும் என்பதே தெரியாமல் போய்விடும். இதை இந்த புள்ளியிலேயே தான் சந்தோஷப்பட்டு கொள்ள வேண்டும்.” என பதிலளித்தார் இயக்குனர் விக்னேஷ் சிவனின் அந்த முழு வீடியோ இதோ…