மிகச் சிறந்த இயக்குனராக தொடர்ந்து தரமான படைப்புகளை வழங்கி வரும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் அடுத்து வெளிவர தயாராகி வரும் திரைப்படம் விடுதலை. பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் துணைவன் சிறுகதையை தழுவி சூரி மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவர உள்ளது.

இதனை அடுத்து கலைப்புலி.S.தாணு அவர்களின் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஜல்லிக்கட்டு மையப்படுத்தி தயாராகும் வாடிவாசல் திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு வாடிவாசல் திரைப்படத்தின் டெஸ்ட் ஷூட் நடைபெற்ற நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே தற்போது சமூக வலைதளங்களில் இயக்குனர் வெற்றிமாறனின் அடுத்த திரைப்படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரும் இயக்குனர் SS.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டானா RRR திரைப்படத்தின் கதாநாயகனுமான ஜூனியர் என்டிஆர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதற்காக இயக்குனர் வெற்றிமாறன், ஜூனியர் என்டிஆரை நேரில் சந்தித்து அதற்கான கதையை சொல்லி இருப்பதாகவும் தகவல்கள் வெளி வருகின்றன.

முன்னதாக RRR திரைப்படத்தின் ரிலீஸ் சமயத்தில் தமிழ்நாட்டில் தனியாருக்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசிய போது நடிகர்கள் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் இருவரிடமும், “எந்த தமிழ் இயக்குனருடன் பணியாற்ற விரும்புகிறீர்கள்? என கேட்டபோது, ஒரே பதிலாக இயக்குனர் வெற்றிமாறன் என பதிலளித்தனர். குறிப்பாக நடிகர் ஜூனியர் என்டிஆர் இயக்குனர் வெற்றிமாறன் குறித்தும் அவரது படைப்புகள் குறித்தும் குறிப்பிட்டு பிரம்மிப்பாக பேசியிருந்தார்.

இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன், ஜூனியர் என்டிஆருக்கு கதை சொல்லி இருப்பதாகவும் விரைவில் இந்த கூட்டணியில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாகவும் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி சோசியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது. ஆனால் இது குறித்த அதிகாரபூர்வ அல்லது நம்பத்தகுந்த தகவல்கள் ஏதும் இதுவரை வரவில்லை. எனவே ஒரு வேளை இது நிஜமாகும் பட்சத்தில் அதிகாரப்பூர் அறிவிப்புகள் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.