தென்னிந்தியாவின் மிக முக்கியமான இயக்குனர் வெற்றிமாறன் அவர்களின் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் ‘விடுதலை’ மிரட்டலான கிரைம் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள விடுதலை படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் 31 ம் தேதி உலகமெங்கும் வெளியாகி ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக இரண்டாவது வாரத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் விடுதலை திரைப்படம் ‘விடுதல’ என்ற பெயரில் தெலுங்கில் வெளியிடவுள்ளனர் படக்குழு. இப்படத்தினை பிரபல தயாரிப்பாளரும் நடிகர் அல்லு அர்ஜுன் அவர்களின் தந்தையுமான அல்லு அரவிந்த் வெளியிடவுள்ளார். வரும் ஏப்ரல் 15 ம் தேதி ஆந்திர மற்றும் தெலுங்கான பகுதிகளில் பெருவாரியான பகுதிகளில் வெளியாகவுள்ளது ககுறிப்பிடத்தக்கது.

தெலுங்கு மொழியில் வெளியிடவுள்ள விடுதல படம் தொடர்பாக படக்குழுவுடன் இயக்குனர் வெற்றிமாறன், நடிகர்கள் சூரி, பவானி ஸ்ரீ ஆகியோருடன் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் அவர்களும் கலந்து கொண்டனர். இதில் தெலுங்கு நடிகர்களை வைத்து எப்போது இயக்குனர் வெற்றிமாறன் படம் இயக்கவுள்ளார் என்ற கேள்விக்கு இயக்குனர் வெற்றிமாறன்,

“அசுரன் படத்திற்கு பின் லாக் டவுனுக்கு பின்பு நான் ஜீனியர் என்டிஆர் அவர்களை சந்தித்து பேசினேன். அந்த படம் கண்டிப்பாக நடக்கும். ஆனால் எனக்கு படம் பண்றதுக்கு ஒரு குறிப்பிட்ட நேரம் தேவைப்படும். என்னை பொறுத்தவரை ஒரு படத்திலிருந்து இன்னொரு படம் செய்ய நீண்ட காலம் எடுக்கும். அதுதான் பிரச்சனை. மற்றபடி நாங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றோம்." என்றார் இயக்குனர் வெற்றிமாறன்.

முன்னதாக இயக்குனர் வெற்றிமாறன் ஜூனியர் என்டி ஆர் அவர்களுடன் ஒரு மல்டி ஸ்டார் திரைப்படம் இயக்கவுள்ளதாகவும் அது இரண்டு பாகங்களாக உருவாகவுள்ளதாகவும் முதல் பாகத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்க அதை தொடர்ந்து இரண்டாம் பாகத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாக தகவல் பெருவாரியாக வெளியாகி வைரலானது. இந்நிலையில் வெற்றிமாறன் அவர்களின் உறுதியான தகவல் ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.

தற்போது இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான இறுதிகட்ட வேலையில் இறங்கவுள்ளார். படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அதை தொடர்ந்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் நடிகர் சூர்யாவுடன் ஏற்கனவே முடிவு செய்த வாடிவாசல் படத்தின் வேலைகளை தொடங்கவுள்ளார். அதை முடித்து இயக்குனர் வெற்றிமாறன் நீண்ட நாள் கழித்து வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் இயக்கவுள்ளதாக தகவல் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.