வரும் ஆகஸ்ட் 10 ம் தேதி ஒட்டுமொத்த இந்திய திரையுலகினரின் எதிர்பார்ப்பின் மத்தியில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘ஜெயிலர்’. நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் கதைகளத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க அவருக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் ஆடுகளம் கிஷோர், வசந்த் ரவி, யோகி பாபு, ரெடின் கிங்க்ஸ்லி, விநாயகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் படத்தின் சுவாரஸ்யம் கூட்டும் விதமாக பிரபல மலையாள நடிகர் மோகன் லால், கன்னட புகழ் சிவராஜ் குமார், தெலுங்கு நடிகர் சுனில், பாலிவுட் பிரபலம் ஜாக்கி ஷராப் மற்றும் தமன்னா ஆகியோர் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்து வழங்கும் இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். இவரது இசையில் வெளியான அனைத்து பாடல்களும் தற்போது பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்து டிரெண்ட்டிங்கில் இருந்து வருகிறது.

நாளுக்கு நாள் ஜெயிலர் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் அடுத்த படம் குறித்த தகவல் இணையத்தில் பரவியது. தகவலின் படி உலகநாயகன் கமல் ஹாசன் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாகவும் தற்போது தனுஷ் இயக்கி நடிக்கவிருக்கும் ‘D50’ படத்திற்கு பின்பு இப்படம் தொடங்கும் என்று தகவல் பரவியது.

இந்நிலையில் தனுஷின் திருடா திருடி, சீடன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனரும் அசுரன், வடசென்னை போன்ற படங்களில் நடித்த நடிகருமான சுப்ரமணிய சிவா அவர்கள் நமது கலாட்டா சினிமாவின் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டார். இந்த பேட்டியில் தனுஷுடன் பயணித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் இயக்குனர் சுப்பிரமணியம் சிவா. இதில் தனுஷ் இயக்குனர் நெல்சன் கூட்டணியில் உருவாகும் புதிய படம் குறித்த பேசிய அவர்,

"தனுஷ் நட்பு வட்டாரத்தில் இருப்பவர்தான் இயக்குனர் நெல்சன். நெல்சனுக்கு அடுத்த படம் இருக்கும். தனுஷ்க்கு அடுத்தடுத்து நிறைய படம் இருக்கு.. இருவரும் சந்தித்தாலே படம் பண்ண போறாங்கனு செய்தி வருவது சினிமாவில் சாதாரணமா வருவது தான். அவங்களோட சந்திப்பு பொதுவாக‌ கூட இருக்கலாம் அல்லது படம் குறித்தும் கூட இருக்கலாம். நிச்சயமா இருவருக்கும் இடையே அந்த சூழல் அமையும் போது அந்த படம் உருவாகும்" என்றார் இயக்குனர் சுப்பிரமணியம் சிவா.

தனுஷ் கையில் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அவரே நடித்து இயக்கும் ‘D50’ மற்றும் தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா கூட்டணியல் உருவாகும் ‘D51’ அதை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் கூட்டணியில் புதிய படம் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘வடசென்னை 2’ ஆகிய திரைப்படங்கள் வரிசையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இயக்குனரும் நடிகருமான சுப்பிரமணியம் சிவா அவர்கள் நமது கலாட்டா சினிமா சிறப்பு பேட்டியில் பகிர்ந்த தகவல்கள் கொண்ட முழு வீடியோ உள்ளே..