கடந்த ஏப்ரல் 28 ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகமெங்கும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் பொன்னியின் செல்வன் பாகம் 2. முதல் பாகம் போல் இரண்டாவது பாகத்திற்கும் மக்கள் பெருவாரியான ஆதரவை அளித்து திரைப்படத்தை வெற்றி திரைப்படமாக மாற்றியுள்ளனர். மேலும் இரண்டாவது முதல் வாரத்தை கடந்து இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைக்கும் இயக்குனர் மணிரத்னம் அவர்களின் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் இதுவரை உலகமெங்கும் 250 கோடிக்கும் மேல் வசூலித்து வசூல் வேட்டையிலும் கலக்கி வருகிறது. விரைவில் 500 கோடி பாக்ஸ் ஆபிஸ் உறுதியாக தொட்டு விடும் என்பது பலரது கருத்தாக உள்ளது.

இப்படத்தையும் படக்குழுவினரையும் திரைப்பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பாராட்டி புகழ்ந்து வரும் நிலையில் தென்னிந்தியாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரும் இயக்குனர் மணிரத்னம் அவர்களின் தீவிர ரசிகருமான இயக்குனர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தை பார்த்து புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், “பிரம்மாண்டமான பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் மிக நுணுக்கமாக எடுத்துள்ளார் புகழ்வாய்ந்த மணிரத்தினம் சார். குறிப்பாக ஐஸ்வர்யா ராய் – விக்ரம் வரும் காட்சி.. அவர்கள் நடிப்பு அட்டகாசமாகவும் கவரும் விதத்திலும் இருந்து அந்த காட்சியை வரலாற்று சிறப்பு மிக்கவையாக மாற்றியுள்ளனர். ஏ ஆர் ரஹ்மான் இசையினால் பிரம்மாண்டத்தை காத்திருக்கிறார். ரவிவர்மன் காட்சிகள் ஒவ்வொன்றும் வசீகரிக்க வைத்தது. படத்தில் நடித்த நடிகர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் மற்றும் குழுவினருக்கும் எனது பாராட்டுகள்..” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவினை தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

இயக்குனர் ஷங்கர் தற்போது லைகா தயாரிப்பில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். மேலும் அதே நேரத்தில் தெலுங்கு தமிழ் என இரு மொழியிலும் உருவாகி வரும் ராம் சரண் நடிக்கும் ‘கேம் செஞ்சர்ஸ்’ படத்தையும் இயக்கி வருகிறார். ஒரே நேரத்தில் இரு படங்களும் இறுதிகட்ட படப்பிடிப்பில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடதக்கத்து.