நடிகர் தனுஷ் - இயக்குனர் செல்வராகவன் சகோதர கூட்டணி தமிழ் சினிமாவில் மிக முக்கியமான கூட்டணி. கவனிக்கத்தக்க இரு புகழ்பெற்ற நட்சத்திரங்களும் தமிழ் சினிமாவின் தங்களுக்கான தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளனர். செல்வராகவன் தனித்துவமான கதையுடன் தமிழ் சினிமாவில் தனது தம்பியாகிய தனுஷுடன் அறிமுகமாகினார். முதல் படத்திலே மிகப்பெரிய கவனம் பெற்றது செல்வராகவன் – தனுஷ் கூட்டணி. படம் வெளியாகி பல ஆண்டுகள் கழிந்தாலும் இன்றும் காதல் கொண்டேன் திரைப்படம் குறித்து பேச்சு ஓய்ந்த பாடில்லை. அந்தளவு திரைப்படம் மிகப்பெரிய தாக்கத்தை தமிழ் சினிமாவில் ஏற்படுத்தியது. அதன்பின் இருவரும் இணைந்து வித்யாசமான கேன்க்ஸ்டர் கதைக்களத்தில் ‘புதுபேட்டை’ படத்துடன் களம் இறங்கினர். இதுவரை தமிழ் சினிமாவில் அதுபோன்ற ஒரு கேன்ங்ஸ்டர் கதை கொண்ட ஒரு படம் பெரிதளவு வரவில்லை என்றே சொல்லலாம். தனுஷை வேறுமாதிரி செதுக்கியிருப்பார் செல்வராகவன். அதனை தொடர்ந்து செல்வராகவன் கதையில் தனுஷ் யாரடி நீ மோகினி திரைப்படத்தில் நடித்தார். மீண்டும் ஒரு பிளாக் பஸ்டர் கொடுத்தது இந்த கூட்டணி. பின்னர் மயக்கம் என்ன திரைப்படம் உருவானது இந்த திரைப்படமும் மக்களிடம் அதிகம் வரவேற்கபட்டது. நீண்ட இடைவெளிக்கு பின் தனது தம்பியும் தமிழ் சினிமாவின் பிளாக் பஸ்டர் நடிகருமான தனுஷுடன் கைகோர்த்தார் செல்வராகவன் அதன்படி கடந்த ஆண்டு ‘நானே வருவேன்’ வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதுவரை தோல்வியை சந்திக்காத இந்த கூட்டணி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு கூட்டணியாகவே இருந்து வருகிறது. மேலும் இந்த கூட்டணி ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்தில் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் தான் நடித்து வெளியாகி திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் 'பகாசூரன்' திரைப்படம் குறித்தும் தனது திரைப்பயணம் குறித்தும் நமது கலாட்டா பிளஸ் சிறப்பு பேட்டியில் பகிர்ந்து கொண்டார். இதில் நடிக்கவந்துள்ள செல்வராகவன் நடிப்பில் தனுஷின் நடிப்பு சாயல் இருக்குமா? என்ற கேள்விக்கு இயக்குனர் செல்வராகவன், "நாங்கள் இருவரும் நிறைய வேலை பார்த்து விட்டோம். அதனால் அது இருக்கலாம். கொஞ்சம் கொஞ்சம்.. ஏனென்றால் அவர் என்னிடம் இருந்து என் எண்ணத்தை வெளிகொண்டு நடித்தவர். அதனால் தற்போது அவர் நடிப்பிலிருந்து என்னுடைய நடிப்பு ஒத்து போவது கொஞ்சம் கொஞ்சம் இருக்கலாம். ஆனால் அதை பற்றி நான் கவலைபடுவதில்லை" என்றார்.

மேலும் தனுஷுடன் நடிப்பு குறித்து கலந்துரையாடல் நடத்தி உள்ளீர்களா என்ற கேள்விக்கு, "நாங்க பொதுவாகவே பெருசா எதும் பேசுனது இல்ல.. அதுதான் நிஜம்.. அதையும் தாண்டி இன்னிக்கு இரவு என்ன செய்ற.. சாப்பாடு வந்துடுச்சா.. உங்க வீட்ல என்ன ஸ்பெஷல்.. னு இவ்வளவு தான் இருக்கும், வேற எதுவும் பேசுனது இல்ல.. ஆரம்பத்தில் இருந்தே நாங்க ஒரு விஷயத்துல தெளிவா இருக்கோம். அவங்க அவங்க வழியில விட்டுடுவோம் அவர் அவரா இருப்பாரு.. நான் நானா இருப்பேன்.. அதனால் பெரிய அளவு உரையாடல் எங்களுக்குள் நடந்தது இல்ல..” என்றார் செல்வராகவன்

மேலும் அவரது திரைப்பயணம் குறித்து பல சுவாரஸ்யமான தகவலை செல்வராகவன் பகிர்ந்த முழு வீடியோ இதோ..