தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தனுஷ் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் தொடர்ந்து பல ஹிட் படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க இயக்குனர்களில் ஒருவரானார். தற்போது இவர் லைகா தயாரிப்பில் ‘லால் சலாம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். கிரிக்கெட் கதைகளத்தில் உருவாகும் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் லால் சலாம் படப்பிடிப்பை முடித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது இறுதிகட்ட பணியில் தீவிரமாக இறங்கியுள்ளார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன், இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் வேலை பார்த்த பணிப்பெண் ஈஸ்வரி என்பவர் ஐஸ்வர்யா வீட்டில் இருந்து சிறுக சிறுக நகைகள் திருடியதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புகார் அளித்திருந்தார். அதையடுத்து விசாரணையில் பணிப்பெண் ஈஸ்வரியிடம் இருந்து 100 பவுன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டது. இந்த நிகழ்வு திரையுலகில் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து புகாரின் அடிப்படையில் ஈஸ்வரி கைது செய்யபட்டார். குற்றம் சாட்டப்பட்ட ஈஸ்வரி அவரது மகள்கள் வங்கி கணக்குகளை முடக்கி கூட்டுறவு வங்கி உத்தரவு பிறப்பித்தது. அதன்பின் கூட்டுறவு வங்கி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய மனுதாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், கடின உழைப்பால் சம்பாதித்து வைத்திருக்கும் வங்கி கணக்குகளை முடக்கியதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்பின் மனுவை விசாரித்த நீதிபதி காவல் துறைக்கு இதுகுறித்து ஒரு வாரத்தில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர். இது தொடர்பான தகவல் தற்போது வைரலாகி வருகிறது.