நடிகர் தனுஷ் தனது முதல் ஹிந்தி படமாக நடித்த ராஞ்ஜனா திரைப்படம் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆனது திரைப்படம் வெளிவந்து பத்து ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையில் அதே அம்பிகாபதி உலகத்துல இருந்து அடுத்த படைப்பாக அதே இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையில் மூன்றாவது முறையாக தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அதன் ப்ரோமோவும் வெளியானது.

ஆகச் சிறந்த நடிகராக கோலிவுட் டோலிவுட் பாலிவுட் ஹாலிவுட் என எல்லாத் திரையுலகிலும் முத்திரை பதித்து ரசிகர்களின் இதயம் கவர்ந்த நாயகராக திகழும் தனுஷ் அடுத்ததாக ராக்கி மற்றும் சாணிக்காயிதம் ஆகிய படங்களின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தற்போது அதிரடி ஆக்சன் படமாக தயாராகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். அடுத்த சில மாதங்களில் கேப்டன் மில்லர் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து மீண்டும் தெலுங்கில் தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் புதிய படத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். இதுபோக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் வட சென்னை 2, இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் உருவாக இருக்கும் ஆயிரத்தில் ஒருவன் 2 உள்ளிட்ட படங்களில் நடிக்க இருக்கும் நடிகர் தனுஷ் கர்ணன் படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் மாரி செல்வராஜுடன் புதிய படத்தில் இணைந்துள்ளார். இத்திரைப்படத்தை தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்கிறது.

இதனிடையே தனுஷின் நடிப்பில் உருவாகும் அடுத்த புது ஹிந்தி படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளிவந்தது. முன்னதாக தனுஷ் நடிப்பில் முதல் ஹிந்தி படமாக வெளிவந்த படம் ராஞ்ஜனா. இந்த படம் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளிவந்து ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சூப்பர் ஹிட் ஆனது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்த அத்ராங்கி ரே திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசையால் விருந்து வைத்திருந்தார்.

இந்த நிலையில் தனுஷ் ஆனந்த்.எல்.ராய் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி தற்போது மூன்றாவது முறையாக புதிய ஹிந்தி படத்தில் இணைந்திருக்கிறது. இது குறித்து நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ராஞ்ஜனா படம் பத்து ஆண்டுகளை கடந்துவிட்டது. சில படங்கள் நம்முடைய வாழ்க்கையை மாற்றும் அப்படி ஒரு படம்தான் இது. இது நம் அனைவரின் வாழ்க்கையை மாற்றியது ராஞ்ஜனாவை ஒரு கிளாசிக் படமாக மாற்றிய அனைவருக்கும் என் நன்றி. இப்போது பத்து ஆண்டுகள் கழித்து ராஞ்ஜனாவின்(அம்பிகாபதி) உலகத்தில் இருந்து “தேரே இஸ்கு மெயின்” இது எந்த மாதிரியான பயணமாக இருக்கும் என எனக்கு தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக ஒரு சாகச பயணமாக இருக்கும்.. எங்களுக்கும் உங்களுக்கும்… நன்றி. ஹர ஹர மஹாதேவ்.. ஓம் நமசிவாய!!” எனக் குறிப்பிட்டு ஒரு அறிக்கையை தனுஷ் வெளியிட்டு இருக்கிறார். மேலும் இந்த புதிய படத்தின் ப்ரோமோவையும் பதிவிட்டு இருக்கிறார். சோசியல் மீடியாவை அதிரவிட்ட அட்டகாசமான தனுஷின் அதிரடியான அந்த ப்ரோமோ வீடியோ இதோ…