இந்திய அளவில் மிக முக்கிய நட்சத்திர நாயகர்களில் ஒருவராகவும் தன்னிகரற்ற சிறந்த நடிகராகவும் உயர்ந்துள்ள நடிகர் தனுஷ், முதல் முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் வாத்தி (SIR). தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் வாத்தி திரைப்படம் வருகிற பிப்ரவரி 17ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

தொடர்ந்து தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து அட்டகாசமான படங்கள் தயாராகின்றன. அந்த வகையில் ராக்கி & சாணிக் காயிதம் படங்களின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அதிரடியான பீரியட் திரைப்படமாக தயாராகும் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது.

அடுத்ததாக தேசிய விருது பெற்ற தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாக்கும் புதிய திரைப்படத்தில் தற்போது தனுஷ் நடித்து வருகிறார். இந்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் பூஜையுடன் தொடங்கியது. இதனிடையே தனது திரைப்பயணத்தில் புதிய மைல்கல்லை எட்டியுள்ள நடிகர் தனுஷ், தனது 50வது படமாக நடிக்கும் புதிய படத்தின் அதிரடியான அறிவிப்பு தற்போது வெளியானது.

தனுஷின் 50வது திரைப்படத்தை இயக்குவது யார்? அல்லது தனுஷ் இயக்குனராக தனது இரண்டாவது படமாக தனது 50வது திரைப்படத்தை இயக்க உள்ளாரா? என தற்போது சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 2022-ஆம் ஆண்டில் தனுஷ் நடிப்பில் ரசிகர்கள் விரும்பும் ஃபீல் குட் திரைப்படமாக வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனுஷின் 50-வது திரைப்படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. சன் பிக்சர்ஸ் அறிவித்த அட்டகாசமான இந்த அறிவிப்பின் போஸ்டர் இதோ...