ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் பக்கா மாஸ் என்டர்டெய்னர் படமாக வெளிவர இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தை பாட்ஷா திரைப்படத்துடனும் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்துடனும் ஒப்பிடுவது பற்றி தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அவர்கள் பதில் அளித்திருக்கிறார். கிட்டத்தட்ட 48 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் மனம் கவர்ந்த சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் அடுத்து வெளிவரவருக்கும் திரைப்படம் ஜெயிலர். முதல் முறையாக இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, மிர்னா மேனன், யோகி பாபு, விநாயகன், ரெடன் கிங்ஸ்லி, ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி செராஃப், தமன்னா ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். விக்னேஷ் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில் நிர்மல்.K படத்தொகுப்பு செய்திருக்கும் ஜெயிலர் திரைப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசை அமைத்திருக்கிறார்.

அனிருத் இசையில் வழக்கம்போல் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் ட்ரெண்டிங் ஹிட்டடித்த நிலையில் சமீபத்தில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படத்தின் ட்ரெய்லர் வீடியோவான ஜெயிலர் ஷோகேஸ் இன்னும் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த தர்பார் மற்றும் அண்ணாத்த ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பெரிய அளவில் பூர்த்தி செய்யாத நிலையில் ஜெயிலர் திரைப்படம் அவை அனைத்தையும் கட்டாயம் பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் கடைசியாக இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளிவந்த பீஸ்ட் திரைப்படமும் சில எதிர்மறை விமர்சனங்களை சந்தித்ததால் இயக்குனர் நெல்சனுக்கு டெய்லர் திரைப்படம் ஒரு நல்ல கம் பேக் படமாக இருக்கும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற சிறப்பு நேர்காணலில் கலந்து கொண்ட முன்னணி தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்கள் நம்மோடு பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்படி பேசுகையில், "ஜெயிலர் திரைப்படத்தை பாட்ஷா திரைப்படத்துடனும் உலகநாயகன் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்துடனும் ஒப்பிடுகிறார்கள் இதை எப்படி பார்க்கிறீர்கள்?" எனக் கேட்டபோது, "அவர்கள் சென்சாருக்கு கொடுத்த ஒரு கதையே வந்துவிட்டது இணையதளத்தில்.. எப்போதுமே ட்ரீட்மென்ட் தான் கதை. கதை என்பது கடைசியில் எந்த அளவிற்கு நம்மை என்டர்டெய்ன் செய்கிறது என்பது தான். கதை என்பது ஒரு அடித்தளம் தான். அந்த அடித்தளத்தில் இருந்து அழகாக என்ன ட்ரீட்மென்ட் கொண்டு வருகிறார்களோ அது என்டர்டைன்மென்ட்டாக வந்தால் ரசிகர்களை கொண்டாடுவார்கள். நான் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி என்ன எதிர்பார்க்கப் போகிறேன் என்றால் அந்த மொத்த 2 மணி நேர 50 நிமிட படத்தை மிகவும் ஜாலியாக என்டர்டெய்னிங்காக தலைவர் ரஜினிகாந்த் அவர்களை ஸ்டைலா கெத்தா ஆக்ஷனா அதே சமயம் ஜாலியாகவும் இருக்கும் ஒரு படம் பார்க்க வேண்டும் அந்த மாதிரி அந்த மாதிரி ஒரு படமாக தான் கொடுப்பார்கள் என்றும் எதிர்பார்க்கிறேன் " என தெரிவித்திருக்கிறார். தயாரிப்பாளர் தனஞ்ஜெயனின் அந்த முழு பேட்டி இதோ...