டெல்லியில் பெண் உடை மாற்றும் ரூமில் கேமரா இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் உள்ள துணிக்கடையில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் துணி எடுக்கச் சென்றுள்ளார். அங்கு தனக்குப் பிடித்த ஆடைகளைத் தேர்வு செய்துவிட்டு, அங்குள்ள பெண் ஊழியரிடம் உடை மாற்று அறை எங்கு இருக்கிறது என்று கேட்டுள்ளார். அதற்கு ஊழியரும், ஒரு குறிப்பிட்ட அறையை, காட்டி அங்குச் சென்று உடையை உடுத்திப் பாருங்கள் என்று சொல்லி உள்ளார்.

அந்த பெண் பத்திரிகையாளரும், உடைகளை மாற்றிக்கொண்டிருக்கும்போது, அந்த ரூமின் கதவை அதே பெண் ஊழியர் அவசர அவசதாக தட்டியுள்ளார். உள்ளேயிருந்து, அந்த பெண் பத்திரிகையாளர் என்ன? யார்? என்று கேட்டபோது, “இந்த அறையில் கேமரா உள்ளது. இங்குத் துணி மாற்ற வேண்டாம்” என்று அந்த ஊழியர் கூறியுள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண், வெளியே வந்த குறிப்பிட்ட அந்த பெண் ஊழியரிடம் சண்டை போட்டு உள்ளார். இதைக் கவனித்த கடையின் உரிமையாளர் நேரில் வந்து மன்னிப்பு கேட்டுவிட்டு, அந்த அறையில் பதிவான கேமரா காட்சிகளை நீக்கியுள்ளார்.

இதனையடுத்து, வெளியே வந்த அவர், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.