கடந்த சில தினங்களுக்கு முன்பு அழகிய பெண் குழந்தைக்கு அப்பாவாகிய குக் வித் கோமாளி புகழ் தனது செல்ல மகளுக்கு அட்டகாசமான பெயரை சூட்டி இருக்கிறார். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவிக்குள் நுழைந்து தனக்கென தனி பாணியில் தனது உடல் மொழியாலும் நகைச்சுவையாலும் ரசிகர்களை சிரிக்க வைத்த புகழ் தொடர்ந்து கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் காமெடியில் கலக்கிய நிலையில் அவரது சின்னத்திரை பயணத்தில் மிக முக்கிய திருப்புமுனையாக அமைந்த நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. ரசிகர்களின் ஆல் டைம் பேவரட் காமெடி ரியாலிட்டி நிகழ்ச்சியாக சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியிருக்கும் இந்த குக் வித் கோமாளின் நிகழ்ச்சியின் மூலம் புகழுக்கு கிடைத்த புகழ் அவரை வெள்ளித்திரைக்கு கைப்பிடித்து அழைத்துச் சென்றது. விஜய் தொலைக்காட்சியின் மூலம் ஜொலித்து மக்களின் மனதை கவர்ந்து விட்டால் தமிழ் சினிமாவில் கட்டாயம் ஒரு என்ட்ரி உறுதி என சொல்லலாம். சந்தானம், யோகி பாபு, சிவகார்த்திகேயன், கவின் உட்பட தற்போது தமிழ் சினிமாவில் ஜொலிக்கும் பல நட்சத்திரங்கள் விஜய் டிவியில் இருந்து வந்தவர்களே என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் நடிகர் வைபவ் கதாநாயகனாக நடித்த சிக்ஸர் திரைப்படத்தில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்த புகழ் தொடர்ந்து தாதா 87, கைதி, காக்டெய்ல் உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார். பின்னர் சபாபதி, என்ன சொல்லப் போகிறாய், வலிமை, எதற்கும் துணிந்தவன், வீட்ல விசேஷம், யானை, DSP, அயோத்தி, ஆகஸ்ட் 16 1947, கருங்காப்பியம், காசேதான் கடவுளடா உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் புகழ் நடித்தார். தொடர்ந்து தற்போது தயாராகி வரும் ஜென்டில்மேன் 2 படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வரும் புகழ் இதனிடையே தற்போது கதாநாயகனாகவும் களமிறங்கும் நடிகர் புகழ் மிஸ்டர் ஜு கிப்பர் எனும் அட்டகாசமான ஃபேண்டஸி காமெடி படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். விரைவில் இந்த திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு தனது காதலி பென்சி ரியாவை புகழ் திருமணம் செய்து கொண்டார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை ஒன்றும் பிறந்தது. இந்த நிலையில் தற்போது தனது செல்ல மகளுக்கு ரித்தன்யா என பெயர் சூட்டியிருப்பதாக புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். பெயர் சூட்டு விழாவின் புகைப்படத்தை வெளியிட்டு, “என் வாழ்வை புன்னகையால் இன்புறச் செய்ய தவமாய் கிடைத்த அழகியடி நீ.. கம்பன் இன்றிருந்தால் உனக்கென தனிக்கவிதையே வடித்திருப்பானடி... ஊரே கண் வைக்கும் அளவிற்கு, பிரம்மன் வடித்த காவியம் நீயடி என் செல்ல மகளே😍... கவிதைக்கு தனிப்பெயர் தேவையில்லை..., இருந்தாலும், எங்கள் வாழ்வை வசந்தமாக்கிய எங்கள் தேவதை தனித்து தெரியவே, இன்று முதல் நீ, பு.ரித்தன்யா என்று அழைக்கப்பட இருக்கிறாய் அன்பு மகளே😘... எங்களின் மகாராணிக்கு பு.ரித்தன்யா என்ற பெயரை வைத்துள்ளோம் என்பதை என் அன்பு உறவுகளுக்கு தெரிவித்து கொள்கிறேன்🙏🏻... ❤️❤️❤️🧿🧿🧿” எனக் குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார். வைரலாகும் குக் வித் கோமாளி புகழின் அந்தப் புகைப்படம் மற்றும் பதிவு இதோ…