கேரளாவில் மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரளா மாநிலம் கொச்சியில் அமிர்தா மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவக் கல்லூரியில், டெல்லியைச் சேர்ந்த 20 வயதான வியோலா ரஸ்தோகி, இரண்டாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று பிற்பகல் நேரத்தில் கல்லூரி கட்டடத்தின் மொட்டை மாடிக்குச் சென்ற மாணவி, அங்கிருந்து கீழே குதித்துள்ளார். இதைப் பார்த்துப் பதறிப்போன அங்கிருந்த சக மாணவர்கள், உடனடியாக அருகிலிருந்து மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

மாணவி தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், இது கொலை அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையின்போது, தற்கொலை செய்துகொண்ட மாணவி, முதலாமாண்டு தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றும், மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தும் அவர் தோல்வி அடைந்ததால், இந்த தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.