ஆகச்சிறந்த நடிகராக படத்திற்கு படம் தரமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடிக்கும் சீயான் விக்ரம் கடந்த 2022 ஆம் ஆண்டில் ரசிகர்களுக்கு ஹட்ரிக் ட்ரீட் கொடுத்தார். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மகான், இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா, இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் - 1 என அடுத்தடுத்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார். குறிப்பாக புகழ்மிக்க பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மிப்பின் உச்சமாய் வெளிவந்த பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படத்தில் மிரட்டலான ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்திய விக்ரம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் மிரள வைத்தார். தொடர்ந்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் இந்த 2023 ஆம் ஆண்டில் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

இந்த வரிசையில் அடுத்ததாக முதல் முறை இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்து வருகிறார். கடைசியாக தனது சார்பட்டா பரம்பரை மற்றும் நட்சத்திரம் நகர்கிறது ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து அடுத்த தங்கலாம் திரைப்படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கி வருகிறார். இதனைத் தொடர்ந்து உலகநாயகன் கமலஹாசன் உடன் புதிய திரைப்படத்தில் ரஞ்சித் இணை இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன. இது குறித்த பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருவதாக தெரிகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாவது பாகமாக தயாராகும் சார்பட்டா ரவுண்ட் 2 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளிவந்தது. மேலும் இதர அறிவிப்புகள் வரும் நாட்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 1800-களின் காலகட்டத்தில் நடைபெறும் பீரியட் திரைப்படமாக கேஜிஎஃப் கதை களத்தை மையப்படுத்தி பிரம்மாண்டமாக 3D தொழில்நுட்பத்தில் தயாராகும் தங்கலான் திரைப்படத்தை தயாரிப்பாளர் K.E.ஞானவேல் ராஜா அவர்களின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து வழங்குகின்றன. சீயான் விக்ரமுடன் இணைந்து பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி ஆகியோர் முக்கிய வேடங்களில் தங்கலான் திரைப்படத்தில் நடிக்கின்றனர். கிஷோர் குமார் ஒளிப்பதிவில், செல்வா.RK படத்தொகுப்பு செய்யும் தங்கலான் திரைப்படத்திற்கு GV.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் PAN INDIA படமாக ரிலீசாக உள்ள தங்கலான் திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகான OTT ரிலீஸ் உரிமையை NETFLIX நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன் தங்கலான் படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியிட்டுள்ள ஒரு புதிய புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “உங்களுக்கு படப்பிடிப்பில் ஓய்வு கிடைக்கும் போது மற்றும் உங்களுக்கு அட்டகாசமான ஒரு புகைப்பட கலைஞர் கிடைக்கும்போது” என சீயான் விக்ரம் அவர்களை குறிப்பிட்டு இந்த புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். நடிகர் சீயான் விக்ரம் எடுத்த மாளவிகா மோகனனின் அந்த புகைப்படம் இதோ…