முதல் அறிவிப்பு வந்த சமயத்தில் இருந்தே நாளுக்கு நாள் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய சீயான் விக்ரம் பா.ரஞ்சித் கூட்டணியின் அதிரடியான தங்கலான் திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்திருக்கிறது. தனக்கென தனி பாணியில் தொடர்ந்து தரமான திரைப்படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த இயக்குனராகவும் சிறந்த படைப்பாளியாகவும் விளங்கும் இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த சார்பட்டா பரம்பரை திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து விரைவில் சார்பட்டா 2 திரைப்படத்தையும் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்க இருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ சில வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட நிலையில் விரைவில் இதர அறிவிப்புகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த நடிகர்களில் ஒருவரான நடிகர் சீயான் விக்ரமுடன் முதல் முறை இயக்குனர் பா ரஞ்சித் இணைந்த திரைப்படம் தான் தங்கலான்.

ஸ்டூடியோ கிரீன் சார்பில் தயாரிப்பாளர் KE.ஞானவேல் ராஜா அவர்கள் தயாரிக்க, இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து வழங்கும் தங்கலான் திரைப்படத்தில் சீயான் விக்ரமுடன் இணைந்து பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கிஷோர் குமார் ஒளிப்பதிவில், செல்வா.RK படத்தொகுப்பு செய்யும் தங்கலான் திரைப்படத்திற்கு GV.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 1800-களின் காலகட்டத்தில் கேஜிஎஃப்-ல் நடைபெற்ற வரலாற்று சம்பவத்தை மையமாக வைத்து பக்கா பீரியட் ஆக்ஷன் திரைப்படமாக உருவாகும் தங்கலான் பிரம்மாண்டமாக 3D தொழில்நுட்பத்தில் தயாராகி வருவதும் குறிப்பிடத்தக்கது. PAN INDIA படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் தங்கலான் திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கும் படக்குழுவினர், ஆஸ்கார் உட்பட ஒன்பது உயரிய சர்வதேச திரைப்பட விழாக்களுக்கும் தங்கலான் திரைப்படத்தை எடுத்துச் செல்ல திட்டமிட்டு இருக்கின்றனர்.

முன்னதாக தங்கலான் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கான ஒத்திகையின் போது ஏற்பட்ட விபத்தில் நடிகர் சீயான் விக்ரமுக்கு விலாவில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் உடனடியாக அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு ஓய்வெடுத்து வந்தார். பின்னர் பூரண குணமடைந்து மீண்டு வந்த நடிகர் விக்ரம் சீயான் சமீபத்தில் தங்கலான் திரைப்படத்தின் படப்பிடிப்பில் இணைந்தார். தங்கலான் திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு மதுரையில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று ஜூலை 4ம் தேதி மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து இருப்பதாக பட குழுவினர் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். முன்னதாக இதனை அறிவிக்கும் வகையில் படத்தின் முதல் நாளில் இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் நடிகை பார்வதியோடு எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும், இறுதி நாளில் இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் மாளவிகா மோகனோடு எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு 118 நாட்கள் நடந்த படப்பிடிப்பை நிறைவு செய்ததாக நடிகர் சீயான் விக்ரம் தெரிவித்தார். தொடர்ந்து சமீபத்தில் மலையாளத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான ரோமாஞ்சம் திரைப்படத்தில் இடம் பெற்ற ட்ரெண்டிங் பாடலின் ஸ்டைலில் மொத்த படக்குழுவும் படப்பிடிப்பை நிறைவு செய்ததை வீடியோவாக வெளியிட்டுள்ளனர். கலக்கலான அந்த வீடியோ இதோ…

Behind all the serious making and hectic shoots, it's a wrap, filled with all laughter and smiles for #Thangalaan

We will see you all soon ❤️@Thangalaan @chiyaan @beemji @kegvraja @StudioGreen2 @officialneelam @parvatweets @MalavikaM_ @PasupathyMasi @DanCaltagironepic.twitter.com/kLmtIUhxnJ

— Studio Green (@StudioGreen2) July 4, 2023