படத்திற்கு படம் வித்தியாசமான கதை களங்களையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களின் இதயத்தில் தனக்கென தனி இடம் பிடித்தவர் சீயான் விக்ரம். அந்த வகையில் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் சீயான் விக்ரம் மிரட்டும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் ரிலீஸாக இருக்கிறது. அடுத்ததாக முதல் முறை இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் தற்போது சீயான் விக்ரம் நடித்து வருகிறார்.

முன்னதாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் திரைப்படம் பல்வேறு காரணங்களால் தடைப்பட்டு நின்றது. கடந்த ஆண்டு(2022) தனது இயக்கத்தில் சிலம்பரசன்.TR நடித்து வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு விரைவில் துருவ நட்சத்திரம் திரைப்படத்தையும் வெளியிட திட்டமிட்டு இருப்பதாக கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்திருந்தார்.

ஒன்றாக என்டர்டைன்மென்ட், கொண்டாடுவோம் என்டர்டைன்மென்ட் & எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்க, கௌதம் வாசுதேவ் மேனன் எழுதி இயக்கியுள்ள துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் சீயான் விக்ரமுடன் இணைந்து ரிது வர்மா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிகளாக நடிக்க, இயக்குனர் பார்த்திபன், சிம்ரன், திவ்யதர்ஷினி-DD , விநாயகன், அர்ஜுன் தாஸ், ராதிகா சரத்குமார், வம்சி கிருஷ்ணா, சதீஷ் கிருஷ்ணன், முன்னா சைமன், மாயா கிருஷ்ணன், அபிராமி வெங்கடாசலம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள துருவ நட்சத்திரம் திரைப்படத்திலிருந்து முதல் பாடலாக “ஒரு மனம்” பாடல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. கடந்த 2016 ஆம் ஆண்டே படப்பிடிப்பு தொடங்கப்பட்டு நீண்ட காலமாக ரிலீஸுக்காக காத்திருந்த துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றதாக தகவல்கள் வெளிவந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். எனவே வெகு விரைவில் துருவ நட்சத்திரம் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் உற்சாகத்தோடு எதிர்பார்த்து இருக்கின்றனர்.