பிரபல எழுத்தாளர் அமரர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் இரண்டு பாகங்களாக இயக்கிய திரைப்படம் பொன்னியின் செல்வன். கடந்த ஏப்ரல் 28 ம் தேதி இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.ரசிகர்களின் ஆரவராத்துடன் வெளியான பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடும் வேலையில் இப்படம் உலகளவில் ரூ 200 கோடிக்கும் மேல் வசூலித்து வசூல் வேட்டையும் செய்து வருகிறது. இந்திய அளவில் கொண்டாடப்படும் இப்படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்த சியான் விக்ரம் அவர்களின் நடிப்பை ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் புகழ்ந்து அவரை பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் சியான் விக்ரம் ரசிகர்களை மேலும் உற்சாகமடைய செய்யும் விதத்தில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் வித்யாசமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் தங்கலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது. இது குறித்த செய்தியை படக்குழு அதன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இதையடுத்து ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் அந்த பதிவினை வைரலாக்கி வருகின்றனர்.

சியான் விக்ரம் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் விளம்பர வேலைக்காக தங்கலான் படப்பிடிப்பு தற்காலிகமாக முன்னதாக நிறுத்தி வைக்கப்பட்டது. பொன்னியின் செல்வன் 2 படத்தின் விளம்பரத்தில் தீவிரமாக சியான் விக்ரம் இறங்கி இந்தியா முழுவது முக்கிய நகரங்களில் படம் குறித்து பேசி வந்தார். பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய ஒப்பனிங் பெற்ற நிலையில் சியான் விக்ரம் பொன்னியின் செல்வன் 2 படத்தின் வேலையை முடித்து தற்போது தங்கலான் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இன்னும் சில ஷெட்டியூல்களை தங்காலன் முடித்து விரைவில் திரையரங்குகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகின்றது. முன்னதாக படத்தின் உருவாக்கம் விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகி வைரலனாது குறிப்பிடத்தக்கது.

ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தினை பா ரஞ்சித் இயக்கி வருகிறார். கோலார் தங்க வயல் கதைகளத்தை சார்ந்து பழங்குடியினரின் போராட்டமாக மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் சியான் விக்ரம் அவர்களுடன் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். தற்போது வெளியாகியுள்ள அப்டேட் ரசிகர்களை குதூகலப் படுத்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.