காதல் விவகாரத்தில் மாணவி மீது ஆசிட் வீசிய மாணவனைப் பொதுமக்கள் கொலை வெறித்தனமாக தாக்கியதில், மாணவனும் மாணவியும் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.பி.இஎஸ் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவன் முத்தமிழனும், அது வகுப்பில் பயிலும் மாணவி சுசித்ராவும் காதலித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், கடந்த சில நாட்களாக முத்தமிழனுடன் பேசாமல், சுசித்ரா தவிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, மாணவியிடம் அவர் விளக்கம் கேட்டுள்ளார். ஆனால், மாணவி எந்த விளக்கமும் சொல்லாமல் மாணவனைத் தவிர்த்து வந்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த முது்தமிழன், பொது இடத்தில் வைத்து சுசித்ரா மீது ஆசிட் வீசியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த மாணவி, சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், மாணவி மீது ஆசிட் வீசிய மாணவனை சக மாணவர்களும், பொதுமக்களும் சேர்ந்து கொலை வெறித்தனமாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த மாணவன் முத்தமிழனை, மாணவி சிகிச்சை பெற்று வரும் அதே மருத்துவமனையில் அனுமதித்து, அவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, மாணவி மீது ஆசிட் வீசிய சம்பவம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.