சிறுமியைக் கடத்தி கல்யாணம் செய்த இளைஞர் அதிரடியாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் மேல்திருவடந்தனூர் பகுதியைச் சேர்ந்த 24 வயதான ராஜதுரை, சென்னை ஆவடி காமராஜர் நகரில் உள்ள தண்ணீர் லாரி நிறுவனத்தில், டிரைவராக வேலை செய்து வருகிறார்.

அதன்படி திருநின்றவூர் பகுதிக்கு நாள்தோறும் ராஜ துரை, லாரியில் சென்று குடிநீர் வினியோகம் செய்து வந்துள்ளார். அப்போது, அந்த பகுதியைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களாக அந்த சிறுமியுடன் பழகிவந்த ராஜதுரையை, சிறுமியின் பெற்றோர் கண்டித்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 26 ஆம் தேதி திடீரென்று சிறுமியுடன் ராஜதுரை மாயமாகி உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி, ராஜதுரை தனது சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்துகொண்டு தனிக்குடித்தனம் நடத்துவது தெரியவந்தது.

இதனையடுத்து ராஜ துரையின் சொந்த ஊருக்குச் சென்ற போலீசார், ராஜதுரையை கைது செய்து, விசாரணை மேற்கொண்டனர். அதில், ராஜதுரை சிறுமியை ஏமாற்றி ஆசைவார்த்தைகள் கூறி கடத்திச்சென்றுது உறுதி செய்யப்பட்டது. இதனால், போக்சோ சட்டத்தின் கீழ் ராஜதுரை மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.