சென்னையில் கல்லூரி பேருந்து தீ பற்றி எரிந்ததால் மாணவர்கள் அனைவரும் அலறி அடித்து வெளியேறினார்கள்.

சென்னை பெருங்களத்தூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் கல்லூரி பேருந்திலிருந்து, திடீரென கரும் புகைகள் வரத் தொடங்கின. இதனையடுத்து, ஓட்டுனர் கீழே இறங்கி பேருந்தின் முன் பகுதியில் சென்று பார்த்துள்ளார். அப்போது, முன் பகுதியில் தீ பற்றி எரிந்துகொண்டிருந்தது.

இதனால், பதறிப்போன ஓட்டுனர் பேருந்திலிருந்த அனைவரையும் அவர் கீழே இறங்கச் சொல்லிக் கூச்சலிட்டார். இதனால், பேருந்திலிருந்த மாணவர்கள் அனைவரும் அலறி அடித்துக்கொண்டு அவசர அவசரமாகக் கீழே இறங்கினார்கள்.

இதனையடுத்து, தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தீயணைப்பு வாகனங்கள் வருவதற்குள், பேருந்து முழுவதும் தீயில் எரிந்து முற்றிலும் சேதமானது. தீ விபத்து காரணமாக, அந்த பகுதி முழுவதும் புகை மண்டலம் போல் காட்சி அளித்தது.

மேலும், இந்த தீ விபத்து காரணமாக, அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தீ விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.