சென்னையில் இல்லற இன்பத்திற்காக 3 வயது குழந்தையைத் தாயே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும், புழல் பகுதியைச் சேர்ந்த பவானிக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இதில் இவர்களுக்கு, 3 வயதில் யாழினி என்ற குழந்தையும், ஒரு வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர்.

இதனிடையே, கணவன் - மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதனால் பவானி, புழலில் இருக்கும் தனது பெற்றோர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். ஒரு கட்டத்தில் கணவன் - மனைவி இருவருக்குள்ளும் கடுமையான சண்டை வந்த நிலையில், பவானியைக் கடுமையாக ரமேஷ் தாக்கி உள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மனைவி, கணவனிடமிருந்து பிரிந்து, தனது இரு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு, புழல் கண்ணப்பாசாமி நகரில் தனியாக வசித்து வந்துள்ளார்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ஆசிப் என்பவருடன் இவருக்குப் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறி உள்ளது. இதனையடுத்து, தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி பவானி, தொடர்ந்து தொல்லை கொடுத்ததால், ஒருகட்டத்தில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

திடீரென ஒரு நாள் தனது பழைய கணவர் ரமேஷ்க்கு போன் செய்து, மகள் யாழினி இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், யாழினியின் உடலை நேரில் பார்த்துக் கதறி அழுதுள்ளார். மேலும், மகள் யாழினியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக, காவல் நிலையத்தில் ரமேஷ் புகார் அளித்தார். இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், யாழினியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆய்வில், குழந்தையை யாரோ கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பதாக மருத்துவர்கள் அறிக்கை அளித்துள்ளனர்.

இதனையடுத்து, ஆசிப் மற்றும் பவானியை அழைத்து போலீசா் தனிப்பட்ட முறையில் விசாரிக்கையில், “தங்களுடைய இல்லற இன்பத்திற்கு, 3 வயது மகள் யாழினி இடையூறாக இருந்ததால், அவளைக் கழுத்தை நெறித்து கொலை செய்ததாக” பவானி ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, இருவரும் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து, இருவரையும் சிறையில் அடைத்தனர். இதனிடையே, இல்லற சுகத்திற்காக, பெற்ற தாயே குழந்தையைக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.