இரவில் ஐ.டி நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் ஊழியர்கள் பீதியடைந்தனர்.

சென்னை பழைய மகாபலிபுரம் சாலை கந்தன் சாவடியில் உள்ள பிரபல ஐ.டி நிறுவனத்திற்கு தொலைப்பேசி மூலம் மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதனால், பதறிப்போன ஐ.டி.நிறுவனம், பணியிலிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை உடனடியாக வெளியேற்றியது.

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து விரைந்து வந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், ஐ.டி.நிறுவனம் செயல்படும் 13 மாடிக் கட்டிடத்தையும் தீவிரமாகச் சோதனை மேற்கொண்டனர். மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

13 மாடிக் கட்டிடத்தையும் சுமார் 4 மணி நேரம் சோதனை செய்த போலீசார், பின்னர் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று தெரிவித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, இன்று அந்த நிறுவனத்தில் கான்பிரன்ஸ் நடக்க உள்ள நிலையில், தொழில் போட்டி காரணமாகவும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.