சென்னை அண்ணாசாலையில் கார் தீ பிடித்த எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை அண்ணா சாலையில், சாலையின் ஓரம் நின்றிருந்த வாடகை காரில், திடீரென புகை வந்துள்ளது. அப்போது, காரிலிருந்து ஓட்டுநர், பயந்துபோய் கீழே இறங்கிப் பார்த்துள்ளார். அப்போது, கார் தானாக தீ பற்றி எரியத் தொடங்கியுள்ளது.

இதனால், அதிர்ச்சியடைந்த கார் ஓட்டுநர் அங்கிருந்து ஓடியுள்ளார். அப்போது, அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள், தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். ஆனால், தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள், கார் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது. மேலும், கார் சுமார் 10 நிமிடங்கள் அளவுக்குக் கொழுந்துவிட்டு எரிந்ததாக, அங்கிருந்தவர்கள் தெரிவித்தார்கள்.

இதனிடையே, அண்ணா சாலையில் கார் தீப்பிடித்தது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், கார் தீ பற்றி எரிந்ததற்கான காரணம் குறித்து, ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அண்ணாசாலை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.