தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் குமார் அவர்களின் தந்தை நேற்று உடல்நல குறைவினால் உயிரிழந்தார். இந்த இழப்பிற்கு நடிகர் அஜித் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு தமிழ் நாடு முதலமைச்சர் உட்பட பல அரசியல் பிரமுகர்கள், திரைபிரபலங்கள் மற்றும் லடச்சகனக்கான ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்தனர். அஜித் அவரது தந்தை சுப்பிரமணியம் உடல் ஈச்சங்காடு பகுதியில் அமைந்துள்ள அஜித் அவர்களின் வீட்டிலிருந்து பெசண்ட்நகர் சுடுகாத்திற்கு தகனம் செய்ய புறப்பட்டது. மிகுந்த போலீஸ் பாதுகாப்புடன் அஜித் அவரது தந்தை உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த இறுதி சடங்கு நடைபெற்ற பெசண்ட்நகர் பகுதியில் முன்னேற்பாடுகளை ஒருங்கிணைத்த பிரபல திரைப்பட நடிகரும் சண்டை பயிற்சியாளருமான பெசண்ட் நகர் ரவி அவர்களிடம் நேற்று நடந்த நிகழ்வு குறித்து கேட்கையில்,

அவர், "அஜித் சார் தரப்பிலிருந்து என்னிடம் பெசண்ட் நகர் பகுதியில் உதவி கேட்டார்கள். இது நான் செய்றது புதுசு அல்ல.. நான் பல நட்சத்திரங்களுக்கு பெசண்ட் நகர் பகுதி சார்ந்து உதவி செய்துள்ளேன். அஜித் சார் என்பதால் அந்த உதவியை செய்ய ஈடுபாடுடன் இருந்தேன். நான் அஜித் சார் வீட்டுக்கு போகாமல் நேராக பெசண்ட் நகர் சுடுகாட்டிற்கு சென்று காவல் துறை உதவியோடு சுடுகாட்டில் என்ன மாதிரியான முன்னேற்பாடுகள் இருக் வேண்டும் என்பதை திட்டமிட்டு செய்தேன். அதனாலே எந்தவொரு சலசலப்பும் இல்லாமல் அந்த நிகழ்வு நடந்தது.

அப்பா தவறிருக்காருனா ரொம்ப மனநிலை மோசமா இருக்கும். அஜித் சார் அப்பா ரொம்ப நல்ல மனுஷன். அவர் இறந்தது அவர் குடும்பத்தார் ரொம்ப துக்கத்தில் இருக்காங்க.. மக்கள் நமக்கு கஷ்டமா இருக்கும் போது அவங்களுக்கு இன்னும் வேதனையா இருக்கும். அஜித் சார் படப்பிடிப்புக்கு வந்தாலே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரள்வார்கள். இந்த விஷயத்தில் அஜித் சார் சொன்ன வார்த்தைக்கு மரியாதை கொடுத்திருக்காங்க ரசிகர்கள்.‌ அதனால் யாரும் வரவில்லை." என்றார் பெசண்ட் நகர் ரவி.

பெசண்ட்நகர் ரவி தமிழ் திரையுலகில் லக்கி மேன் திரைப்படம் மூலம் சோலோ ஸ்டன்ட் செய்து பிரபலமடைந்தார். பின் தமிழ் சினிமாவில் முக்கிய வில்லனாகவும் அடியாளாகவும் இதுவரை நடித்து அசத்தியுள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.