தன்னிகரற்ற சிறந்த நடிகராக தனது ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் மிகுந்த சிரத்தையோடு பணியாற்றி மக்களை மகிழ்வித்து வரும் நடிகர் சீயான் விக்ரம் கடந்த 2022 ஆம் ஆண்டில் அடுத்தடுத்து வித்தியாசமான கதைக்களங்களில் அட்டகாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை மிரள வைத்தார். முன்னதாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சீயான் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்த மகான் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீஸாகி பெரும் வரவேற்பை பெற, இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் பல வித்தியாசமான கெட்டப்புகளில் சீயான் விக்ரம் நடித்து வெளிவந்த கோப்ரா திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் தனது கனவு படமாக இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் எனும் அட்டகாசமான கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்த சீயான் விக்ரம் அனைத்து ரசிகர்களின் இதயங்களையும் கொள்ளையடித்தார்.

கடந்த 2022 ஆம் ஆண்டில் ரசிகர்களுக்கு ஹட்ரிக் ட்ரீட் கொடுத்த சீயான் விக்ரம் இந்த ஆண்டிலும் அதை தொடர இருக்கிறார். அந்த வகையில், வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் சீயான் விக்ரம் மிரட்டும் பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படம் ரிலீஸாக இருக்கிறது. அடுத்ததாக முதல் முறை இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்து வருகிறார். 1800-களின் காலகட்டத்தில் நடைபெறும் பீரியட் திரைப்படமாக கேஜிஎஃப் கதை களத்தை மையப்படுத்தி பிரம்மாண்டமாக 3D தொழில்நுட்பத்தில் தயாராஏகும் தங்கலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முன்னதாக கடந்த 2016ம் ஆண்டு இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்த திரைப்படம் துருவ நட்சத்திரம். பல்வேறு காரணங்களால் தடைப்பட்டு நின்ற துருவ நட்சத்திரம் திரைப்படத்தை, கடந்த ஆண்டு(2022) தனது இயக்கத்தில் சிலம்பரசன்.TR நடித்து வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு விரைவில் வெளியிட திட்டமிட்டு இருப்பதாக கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்திருந்தார். ஒன்றாக என்டர்டைன்மென்ட், கொண்டாடுவோம் என்டர்டைன்மென்ட் & எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்க, கௌதம் வாசுதேவ் மேனன் எழுதி இயக்கியுள்ள துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் சீயான் விக்ரமுடன் இணைந்து ரிது வர்மா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிகளாக நடிக்க, இயக்குனர் பார்த்திபன், சிம்ரன், திவ்யதர்ஷினி-DD , விநாயகன், அர்ஜுன் தாஸ், ராதிகா சரத்குமார், வம்சி கிருஷ்ணா, சதீஷ் கிருஷ்ணன், முன்னா சைமன், மாயா கிருஷ்ணன், அபிராமி வெங்கடாசலம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றதாக தகவல்கள் வெளிவந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள பிரபல ஹாலிவுட் நடிகர் பெனிடிக்ட் கேரெட் தனது ட்விட்டர் பக்கத்தில், துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் தற்போது நிறைவடைந்து இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். ஆறு வருட படப்பிடிப்பிற்கு பிறகு இறுதியாக துருவ நட்சத்திரம் திரைப்படம் இந்த மே மாதம் ரிலீஸ் ஆகும் எனவும் பெனிடிக்ட் கேரெட் தெரிவித்துள்ளார். முன்னதாக சமூக வலைதளங்களில் வரும் மே 19ஆம் தேதி துருவ நட்சத்திரம் திரைப்படம் ரிலீஸாகவுள்ளதாக தகவல்கள் வெளிவரும் நிலையில், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக ரசிகர்களாக ஆவலோடு காத்திருக்கின்றனர்.