இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்களின் நான்கு சுவர்கள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களை குழந்தை நட்சத்திரமாக கலக்கிய பப்லு ப்ரித்வி ராஜ் தொடர்ந்து பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் தனக்கே உரித்தான ஸ்டைலில் வில்லனாகவும் நெகட்டிவ் கதாபாத்திரங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்திய நடிகர் பப்லு ப்ரித்வி ராஜ் சின்னத்திரையிலும் பல நிகழ்ச்சிகள் மூலம் மக்களை கவர்ந்தார். மேலும் தற்போது வரை பல மெகா சீரியல்களிலும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.

இதனிடையே நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற சிறப்பு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பப்லு பல சுவாரஸ்யமான தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். ஆரம்ப கட்டத்தில் நீங்கள் கிளாமர் திரைப்படங்களிலும் நடித்தீர்கள் என்று ஒரு கருத்து இருந்தது.. அது நிஜமா? அது குறித்து நீங்கள் வருந்தியது உண்டா? எனக் கேட்டபோது,

“நான் ஒரு 4-5 மலையாள திரைப்படங்களில் நடித்தேன். அந்த ஆகால கட்டங்களில் என்ன செய்வார்கள் என்றால், பிட் ஃபிலிம் என்று ஒன்று ஓட்டுவார்கள். படம் ஓடும் நடுவில் வேறு ஏதாவது போட்டு விடுவார்கள். நான் எட்டிப் பார்ப்பது போல் ஒரு காட்சி இருந்தால் அங்கே வேறு எதுவோ நடப்பது போல் இருக்கும். அது ஒரு 20 நிமிடங்கள் ஓடும் அதன் பிறகு எல்லோரும் எழுந்து சென்று விடுவார்கள். அது எனக்கு தெரியவே தெரியாது. நான் இது மாதிரி 4 - 5 திரைப்படங்கள் நடித்து விட்டேன். பின்னர் அது வேறு மாதிரி போனது. நாம் செய்த நல்ல விஷயங்கள் இருக்கிறது அல்லவா..? அவற்றை எல்லாம் உடனடியாக மறந்து விடுவார்கள். நான் தேசிய விருது வென்றேன். நந்தி விருது வென்றேன். எவ்வளவோ செய்து இருக்கிறேன் அதை எல்லாம் மறந்து விட்டார்கள். ஏதோ ஒரு நான்கு பிட்டு படங்களில்... அதன் பெயரே பிட்டு படம்... ஏனென்றால் அதில் நான் அவிழ்த்து போட்டுக் கொண்டு நிற்கவில்லை. அதை நான் ஒரு குறை மாதிரி சொல்லவில்லை. ஒருவேளை எதிர்காலத்தில் அது மாதிரி ஒரு காட்சி தேவைப்பட்டால் அதுதான் என்னுடைய பணி நான் நடித்து தான் ஆக வேண்டும். ஆனால் அந்த காலகட்டத்தில் அது பண்ணி இருக்க கூடாது தெரியாமல் செய்துவிட்டேன். அதுதான் உண்மை.”

தனது திரைப் பயணத்தின் ஆரம்ப கட்டத்தில் மலையாள திரைப்படங்கள் என்று கிளாமர் திரைப்படங்களில் தன்னை ஏமாற்றி நடிக்க வைத்தது குறித்தும் இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்து கொண்ட பப்லு ப்ரித்வி ராஜின் அந்த முழு பேட்டி இதோ…