ஷாரூக் கானின் ஜவான் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் அட்லீயின் அடுத்த பாலிவுட் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியானது. ஆரம்ப கட்டத்தில் இந்திய சினிமாவின் நட்சத்திர இயக்குனராக பல பிரம்மாண்ட படைப்புகளை கொடுத்த இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக பணிபுரிந்த இயக்குனர் அட்லீ, ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ஆர்யா - நயன்தாரா இணைந்து நடித்த ராஜா ராணி திரைப்படத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜயுடன் முதல் முறை கைகோர்த்த அடலீ இயக்கி தெறி படம் சூப்பர் ஹிட்டானது. தொடர்ந்து அடுத்தடுத்து மெர்சல் மற்றும் பிகில் என பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து, தளபதி விஜயை வைத்து ஹாட்ரிக் மெகா ஹிட் கொடுத்த அட்லீ தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர இயக்குனராக உயர்ந்தார்.

இதனை அடுத்து தற்போது முதல் முறையாக பாலிவுட் சினிமாவில் இயக்குனர் அட்லீ காலடி எடுத்து வைத்துள்ளார். அந்த வகையில் தனது முதல் ஹிந்தி திரைப்படமாக இயக்குனர் அட்லீ இயக்கும் ஜவான் திரைப்படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கான் கதாநாயகனாக நடிக்கிறார். ஜவான் திரைப்படத்தில் ஷாரூக் கானுக்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ஜவான் திரைப்படத்தில் சிறப்பு கௌரவ வேடத்தில் தளபதி விஜய் நடித்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கும் ஜவான் திரைப்படம் வருகிற செப்டம்பர் 7ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

இதனிடையே ஷாருக் கான் நடித்திருக்கும் ஜவான் திரைப்படத்தின் ரிலீஸுக்கு முன்பாக இயக்குனர் அட்லியின் அடுத்த பாலிவுட் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியானது. தனது மனைவி பிரியா அட்லி உடன் இணைந்து தனது ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தரமான படைப்புகளை தயாரித்து வரும் இயக்குனர் அட்லி, ஜீவாவின் சங்கிலி புங்கிலி கதவ தொற மற்றும் அர்ஜுன் தாஸின் அந்தக்காரம் படங்களைத் தொடர்ந்து அடுத்த படைப்பாக ஹிந்தியில் புதிய படத்தை தயாரிக்கிறார். தமிழில் இயக்குனர் ஜீவா நடிக்க வெளிவந்த கீ திரைப்படத்தின் இயக்குனர் காலிஸ் இயக்கத்தில் உருவாகும் இந்த புதிய திரைப்படத்தை சினி ஒன் ஸ்டூடியோஸ் நிறுவனம், அட்லியின் ஏ பார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் நிறுவனத்தோடு இணைந்து தயாரிக்கிறது. ஹிந்தியில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான வருண் தவான் கதையின் நாயகனாக நடிக்க அதிரடி ஆக்சன் என்டர்டைனிங் திரைப்படமாக உருவாகும் இந்த திரைப்படம் அடுத்த 2024 ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி வெளியாகும் எனவும் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு இதோ…