மகளை ஆற்றில் வீச கடவுளே காரணம் என்று அதிர்ச்சி கொடுத்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.

அசாம் மாநிலம் பாஸ்கா மாவட்டத்தில் உள்ள லஹாபாரா கிராமத்தைச் சேர்ந்த பீர்பால் பாரோ - ஜூனுக்கு
2 வயதில் ரிஷிகா என்ற பெண் குழந்தை இருந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 28 ஆம் தேதி வீட்டிலிருந்த 2 வயதுக் குழந்தையை வெளியே அழைத்துச் சென்ற தந்தை பீர்பால், சிறிது நேரம் கழித்து வீட்டிற்குத் தனியாக வந்துள்ளார். அப்போது, குழந்தை எங்கே என்று அவரது மனைவி கேட்டுள்ளார். அதற்கு அவர், வீட்டிற்கு அருகே ஓடும் ஆற்றில் மகளை விட்டுவிட்டதாகப் பதில் அளித்துள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த அவரது மனைவி, தனது உறவினர்கள் உதவியுடன் அருகில் உள்ள ஆற்றில் தேடிப் பார்த்துள்ளார். அப்போது, குழந்தை கிடைக்காத நிலையில், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், குழந்தையைத் தேடி, பின்னர் சடலமாக மீட்டனர்.

இதனையடுத்து குழந்தையின் தந்தை பீர்பாலை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், “கடவுள் தனது கனவில் வந்து, மகளை ஆற்றில் விட சொன்னதால், ஆற்றில் விட்டுவிட்டேன்” என்று பதில் அளித்துள்ளார்.

மேலும், பீர்பாலுக்கு பில்லி சூனியத்தின் மேல் நம்பிக்கை உள்ளதாகவும், மந்திரவாதி யாரோ சொல்லித்தான், அவர் இப்படிச் செய்திருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. அத்துடன், பீர்பால் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல், செயல்படுவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால், மந்திரவாதிகள் தூண்டுதலால் தான் அவர் இப்படிச் செய்தாரா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, தந்தையே பெற்ற மகளை ஆற்றி வீசி கொலை செய்துள்ள சம்பவம் அசாம் மாநிலம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது