தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் நடிகராகவும் நம்பிக்கை நட்சத்திரமாகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அசோக் செல்வன். தொடர்ந்து பல வித்யாசமான கதாபாத்திரங்களில் நல்ல நல்ல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் அசோக் செல்வன். கடந்த 2022 ல் வரிசையாக சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மத லீலை, ஹாஸ்டல், வேழம், நித்தம் ஒரு வானம் என என ஐந்து திரைப்படங்கள் அசோக் செல்வன் நடிப்பில் அடுத்தடுத்து வெளிவந்து ரசிகர்களை மகிழ்வித்தன. இந்த ஆண்டு இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவின் மாடர்ன் லவ் சென்னை இணைய தொடரில் இயக்குனர் பாலாஜி சக்தி வேல் இயக்கிய இமைகள் எபிசோடில் நாயனாக நடித்து கவனம் ஈர்த்தார். தற்போது அசோக் செல்வன் ‘சபா நாயகன்’ திரைப்படத்திலும் இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் ப்ளு ஸ்டார் திரைபடத்திலும் நடித்து வருகிறார்.

இதனிடையே அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகி வெளியாகவிருக்கும் ‘போர் தொழில்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் அசோக் செல்வன். இப்படத்தில் அசோக் செல்வனுக்கு நிகரான கதாபாத்திரத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத் குமார் நடித்துள்ளார். மேலும் படத்தில் நிக்கிலா விமல், நிழல்கள் ரவி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் இ4 எக்ஸ்பிரிமெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு செய்கிறார். மேலும் ஜேக்ஸ் பிஜாய் போர் தொழில் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

அசோக் செல்வன் திரைப்பயணத்தில் மிக முக்கியமான திரைப்படமான ‘தெகிடி’ திரைப்படத்தை போல் இந்த போர் தொழில் திரைப்படம் இருக்கும் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பின் படி இப்படத்தின் முதல் பார்வை முதல் டீசர் வரை எதிர்பார்பை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இந்நிலையில் போர் தொழில் திரைப்படத்தின் டிரைலரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

தொடர் கொலைகளை கண்டறியும் வழக்கில் சரத் குமார் முதல் அதிகாரியாக இறங்க அவருக்கு உதவியாக பயிற்சி காவலதிகாரி அசோக் செல்வன் இருக்கிறார்.வித்யாசமான முறையில் ஒரே மாதிரியான கொலைகளை கண்டறியும் முயற்சியில் சரத் குமாரும் அசோக் செல்வனும் வெல்வார்களா என்பதே படத்தின் திரைக்கதையாக அமைந்துள்ளது. பக்கா கிரைம் திரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் போர் தொழில் திரைப்படம் வருகிற ஜூன் 9ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.